பட்ஜெட் கூட்டத்தொடர்: திமுக எம்எல்ஏக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த முக்கிய அட்வைஸ் – instructions given by udhayanidhi stalin to dmk mlas regarding the budget session

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், விரைவில் தவெக அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதற்கான பணிகளில் முதல்வர், அமைச்சர்கள் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் தவெக அரசு முன்பாக என்னென்ன கேள்விகளை எழுப்புவது என்பது குறித்து வியூகங்கள் வகுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் , திமுக எம்எல்ஏக்களுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

தவெக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த அரசுடைய முதல் பட்ஜெட் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் என்ன மாதிரியான அறிவிப்புகள் இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதனால் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் போன்று, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களுடைய செயல்பாடுகள், வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் லாக்கப் மரணங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு தவெக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் தொடர்ந்து சட்டமன்றத்தில் எழுப்பப்படும், கேள்விகளை இப்போதே தயார் செய்யுங்கள் எனவும் திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். முக்கியமாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் சட்டமன்றத்தில் கவனமாக செயல்பட வேண்டுமெனவும் அட்வைஸ் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும் பெரும்பாலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீனியர்களாக இருக்கின்றனர்.

இதனால் புதிய எம்எல்ஏக்களை வழிநடத்துவதில் உதவி செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இதற்கிடையில் பட்ஜெட் தயாரிப்பதில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அந்தந்த துறை அமைச்சர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டுமே பட்ஜெட் கூட்டத்தொடர் சம்பந்தமான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது தமிழக அரசியல் களத்தில் மேகதாது அணை விவகாரம் தீவிரம் அடைய ஆரம்பித்துள்ளது. இதுக்குறித்தும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசி நாள் முதல்வர் ஜோசப் விஜய் பேசும்போது, பேரவையில் சைகை காட்டி பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து சட்டமன்றத்தை சினிமா படப்பிடிப்பு போன்று தவெக அரசு மாற்றி விட்டது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் என்ன மாதிரியான நிகழ்வுகள் அரங்கேற போகிறது என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source link