19ம் நுாற்றாண்டு கல்வெட்டு விளக்குத்துாண் கண்டெடுப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டை தேவர் மலை பெருமாள் கோயில் அருகே நீள்பாறையில் 19ம் நுாற்றாண்டு கல்வெட்டு, விளக்குத் துாண் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டெடுத்த திண்டுக்கல் வரலாற்று ஆய்வாளர் விஸ்வநாததாஸ் தலைமையிலான வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரன், பெருமாள்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் கூறியதாவது:

இடையகோட்டை தேவர் மலை மீதுள்ள நீள்பாறையில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலமான 19ம் நுாற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இக்கல்வெட்டில் ‘1839ம் வருடம் வைகாசி மாதம் பத்தாம் நாள் மன்னார்கோட்டை சிக்குட்டி என்ற சின்னக்குட்டி ஆசாரி தவமிருந்த மலை’ என அப்போது பயன்பாட்டில் இருந்த தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் ஆண்டை குறிப்பிடாமல் 1839 என்ற ஆங்கில ஆண்டை குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கமாக ஆங்கிலேய அரசு அலுவலகங்கள், மாளிகைகள், சர்ச்கள் ஆகியவற்றின் கல்வெட்டுகளில் தான் ஆங்கில ஆண்டு குறிப்பிடப்படும்.

ஆனால் திண்டுக்கல் பகுதியில் வாழ்ந்த சாதாரண குடிமகனின் ஆங்கில ஆண்டு குறிப்பிடப்பட்ட முதல் கல்வெட்டு இது தான்.

இப்பாறை 200 அடி நீளம், 20 அடி உயரம், உச்சி பகுதி இரண்டு அடி அகலத்துடன் உள்ளது. அதன் உச்சியில் விளக்கு துாண் ஒன்று உள்ளது.

மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சியை அடைய நான்கு கி.மீ., துாரம் மலைப்பாதையில் செல்ல வேண்டும்.

இப்பகுதி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கன்னிவாடிபாளையத்திற்கு உட்பட்டு இருந்தது. திருமலை நாயக்கரின் மைசூர் போருக்கு பின்னர் விருப்பாச்சிபாளையத்தில் சேர்க்கப் பட்டது என்றனர்.

Source link