இந்த அளவுக்கு மேல் யாரும் சர்க்கரையை இருப்பு வைக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்தத் தடை உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தும்?
இந்தியாவில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சர்க்கரையைப் பதுக்கி வைப்பதே ஆகும். இது சாமானிய மக்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சாமானிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான சர்க்கரையின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு 50 ரூபாயை எட்டியுள்ளது. இதுபோன்ற சூழலில், சர்க்கரை விலையை நிலைப்படுத்த பதுக்கலுக்கு எதிரான உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, ஜூலை 28ஆம் தேதியன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்தவொரு சர்க்கரை வியாபாரியும் 30 நாட்களுக்கு மேல் சரக்குகளை அல்லது இருப்பை வைத்திருக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக 4,000 குவிண்டால் என்ற இருப்பு வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955’-ன் பிரிவு 3 மற்றும் ‘சர்க்கரை (கட்டுப்பாட்டு) ஆணை, 2025’-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் இந்தத் தடையை விதித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பு!
சரக்கு வந்து சேர்ந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்கு மேல் எந்தவொரு சர்க்கரை வியாபாரியும் இருப்பை வைத்திருக்கக்கூடாது என்றும், நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் 4,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைத்திருக்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலவீனமான பருவமழைக்கான முன்னறிவிப்புகளுக்கு மத்தியில் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்கனவே சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவு யாருக்குப் பொருந்தாது?
அரசு கணக்கில் உள்ள சர்க்கரை இருப்புக்களுக்கோ அல்லது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்காக மாநில அரசால் அல்லது அதன் அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வியாபாரிகளிடம் உள்ள இருப்புக்களுக்கோ இந்த உத்தரவு பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகள் இருப்பு நிலையைப் புதுப்பிக்க வேண்டும்!
அரசு குறிப்பிட்டுள்ள வரம்புகள் அல்லது கால அளவுகளை மீறாத வகையில், மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேச நிர்வாகங்கள் இருப்பு வைப்பு மற்றும் வர்த்தக வரம்புகளை நிர்ணயிக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பு வைக்கும் காலத்தைக் கணக்கிடுவதற்கு வியாபாரி சரக்கைப் பெறும் தேதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து வியாபாரிகளும் தங்கள் சர்க்கரை இருப்பு நிலையை இணையதளத்தில் பதிவு செய்து, அவ்வப்போது புதுப்பிக்குமாறும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை!
உள்நாட்டில் சர்க்கரை கிடைப்பதை அதிகரிக்கவும் விலையைக் கட்டுப்படுத்தவும், கடந்த மே மாதத்தில் இந்தியா இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதித்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 2025-26 சந்தைப்படுத்தல் ஆண்டிற்காக 1.6 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எத்தனால் உற்பத்திக்கான பயன்பாட்டைக் கழித்த பிறகு, 2025-26 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கான மொத்த சர்க்கரை உற்பத்தியை 29.3 மில்லியன் டன்னாக ISMA மதிப்பிட்டுள்ளது. இது 2024-25 ஆம் ஆண்டில் பதிவான 26.12 மில்லியன் டன்னை விட அதிகமாகும். நம் நாட்டில் போதுமான சர்க்கரை இருப்பு உள்ளதாகத் தெரிவித்த சர்க்கரைத் துறை அமைப்புகளான ISMA மற்றும் NFCSF, சமீபத்திய விலை உயர்வுக்கு மத்தியில், பெருநிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் மொத்த, சில்லறை வர்த்தகர்கள் “ஊகத்தின் அடிப்படையிலான கொள்முதலை” (speculative buying) தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
Source link
