ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

வே.ராஜன் பேசுகையில், “முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் காலை உணவுத் திட்டமென பெயர் மாற்றியிருக்கிறார்கள். முடிந்தால் மாலை சிற்றுண்டி திட்டமென ஒன்றை கொண்டு வந்து அதற்கு பெயர் வைத்துக் கொள்ளுங்கள். இருக்கிற பெயரை ஏன் மாற்றுகிறீர்கள். எங்களின் தலைவர் ஸ்டாலின் அவர் பெயரை எந்தத் திட்டத்துக்கும் வைத்தாரா? நான் முதல்வன் திட்டத்தில் அவர் பெயர் இருக்கிறதா? மகளிர் விடியல் பயணத்தில் அவர் பெயர் இருக்கிறதா?
பிறகு ஏன் எல்லா திட்டங்களின் பெயரையும் மாற்றுகிறீர்கள்? இப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறீர்களே…வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வராக நீங்கள் தேசியக்கொடியை ஏற்றுவீர்கள். முதல்வருக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமையை வாங்கி கொடுத்ததே கலைஞர்தான். முடிந்தால் அதை வேண்டாமென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, ‘கடந்த திமுக அரசு ஆட்சியமைந்த உடன் அம்மா உணவகங்களின் மீது யாரும் கை வைக்கக்கூடாது, அவை அந்தப் பெயரிலேயே அப்படியே தொடருமென எங்களின் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இந்த அரசு அவர்கள் கொண்டு வராத அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத திட்டங்களில் கூட ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நிதி நெருக்கடி நிலவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் முதல்வரின் விளம்பரங்களை பேனர்களாக அடித்து வைத்திருக்கின்றனர். திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்களின் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் கூட முதல்வரின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம்?’ என்றார்.
