‘தர்மபுரி’, ‘தாம் தூம்’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகை ராய் லட்சுமி. முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இரண்டு ஆண்டுகள் ஓய்வில் இருந்தார் ராய் லட்சுமி
தற்போது மீண்டும் இவர் நடிப்பிற்கு திரும்பவிருக்கிறார். இந்த கம்பேக் குறித்தும், அவர் மீதான பார்வை குறித்தும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “நான் நடிக்க வந்த காலத்தில் சினிமாத் துறை முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. அப்போது நாங்கள் ஒரு வருடத்திற்கு ஐந்து படங்கள் வரை நடிப்போம்.
வாய்ப்பு கிடைத்தால் ஆறாவது படத்தையும்கூட முடித்துவிடுவோம். ஆனால் இன்று நிலைமை மாறிய பிறகு, ‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ என்றாகிவிட்டது.
ஆரம்ப காலத்தில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நான் பெரிய அளவில் கவனம் செலுத்தியதில்லை. நல்ல அனுபவங்களும் கெட்ட அனுபவங்களும் கிடைக்கும் வரை, எது சரியான படம், எது தவறான படம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நான் தோல்விப் படங்களையும் பார்த்திருக்கிறேன், வெற்றிப் படங்களையும் பார்த்திருக்கிறேன். விஷயங்களைச் சொந்தமாக அனுபவித்துத் தெரிந்துகொள்வதே எனக்குப் பிடிக்கும்.
அதனால்தான், ஒரு குறிப்பிட்ட வகை கதாபாத்திரங்களுக்குள் என்னை நான் எப்போதும் சுருக்கிக்கொண்டதில்லை. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் நான் நடித்திருக்கிறேன். அங்கு பார்வையாளர்கள் என்னை ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ எனப் பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழில், நான் புடவை கட்டிக்கொண்டு நடித்தால்கூட மக்கள் என்னைக் கிளாமரான நாயகியாகவே பார்க்கிறார்கள். என் மீது இந்த கிளாமர் பிம்பம் ஏன் படிந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
திரையுலகில் ஒரு குறிப்பிட்ட முறையில் அறிமுகமாகி, அந்த அடையாளம் மக்களுக்குப் பிடித்துவிட்டால், மீண்டும் மீண்டும் நம்மிடம் இருந்து அதையேதான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், நான் போதுமான அளவிற்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இனிமேல் கிளாமர் இல்லாத, யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். மேக்கப்கூட இல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை” எனப் பகிர்ந்திருக்கிறார்.
