பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 13 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ளது.
“தூய்மை பணியாளர்கள் எதிரிகள் அல்ல; தேவதைகள்”
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், “தூய்மை பணியாளர்கள் யாரும் நமக்கு எதிரிகள் இல்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் எதிரிகள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தூய்மை பணியாளர்கள் வெறும் பணியாளர்கள் அல்ல என்றும், அவர்கள் “தேவதைகள்” என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான கு. பாரதி தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
“தேவதைகள் என்றால் ஊதிய உயர்வு குறித்து பேச வேண்டாமா?”
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கு. பாரதி, சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவதாகவும், தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்தும் அங்கு பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தூய்மை பணியாளர்களை தேவதைகள் என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “அப்படியானால் ஆண்கள் எல்லாம் தேவதூதர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தேவதைகள் என்றாலே வெள்ளை உடையில் தூய்மையாக இருக்கும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பாரதி, தூய்மை பணியாளர்களை அந்த அளவுக்கு உயர்த்திப் பேச வேண்டும் என்று அமைச்சர் நினைத்தால், முதலில் அவர்களின் ஊதிய உயர்வு குறித்து பேசியிருக்க வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார்.
“எங்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து பேசவில்லை”
தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, மாதவிடாய் விடுப்பு , மகப்பேறு விடுப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் போதுமான அளவில் பேசப்படவில்லை என்றும் பாரதி குற்றம்சாட்டினார்.
தூய்மை பணியாளர் போராட்டம்…விளக்கம் அளித்த ராஜ்மோகன்!
மேலும், போராட்டக்காரர்களை முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும்,தூய்மை பணியாளர்களின்அடிப்படை பிரச்சினைகளை அரசு இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றும் பாரதி தெரிவித்தார்.
“ஆட்சிகள் மாறினாலும் எங்கள் போராட்டம் தொடர்கிறது”
தங்களது கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதாகக் குறிப்பிட்ட பாரதி, கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சிக் காலத்திலும் தங்களது உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே, தங்களை “தேவதைகள்” என அழைப்பதைவிட, தங்களது வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்பதே தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
