நமது நிருபர்
‘நடுபழனி’ என அழைக்கப்படும், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 அடி உயரமுள்ள மரகத முருகர் சிலையை, மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பியுள்ளது. அக்கும்பலை பிடிக்க, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருக்கரணை என்ற கிராமத்தில், சிறிய மலையில் மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவில், ‘நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேய’ டிரஸ்ட் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. பிரதிஷ்டை இக்கோவிலில் மூலவர், 2.5 அடி உயரத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, மரகத முருகர் காட்சி அளித்து வந்தார்.
கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த, கணபதி சச்சிதானந்த சுவாமிகள் டிரஸ்டால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மரகத முருகர் சிலை, 2008ல் கோவிலில், பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவில், திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலை போலவே இருப்பதால், காஞ்சி மகா பெரியவர், ‘நடுபழனி’ என பெயரிட்டார். ஆண்டுதோறும் பங்குனி உத்திரம், தைப்பூசம், சஷ்டி போன்ற விசேஷ நாட்களில், நிகழ்ச்சிகள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான பக்தர்கள் நடு பழனிக்குச் சென்று மரகத முருகரை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு மேல், மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, மரகத முருகர் சிலையையும், அங்கிருந்த வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். கோவிலின் மூன்று கதவுகளை உடைத்து, அங்கிருந்த 16 ‘சி.சி.டி.வி’ கேமராக்களின் ஒயர்களை அறுத்து, அபாய ஒலி எழுப்பும் கருவிகளை செயல் இழக்க செய்துள்ளனர். பல நாட்களாக நோட்டமிட்டே, இந்த செயல்களில் இறங்கியுள்ளனர்.
போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, ‘ சி.சி.டி.வி’ கேமராவின் வீடியோ பதிவுகள் பதிவாகும் டி.வி.ஆர்., கருவியையும் திருடிச் சென்றுள்ளனர். திட்டம் தகவல் அறிந்து, சித்தாமூர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவக்கினர். கோவிலுக்கு அருகே உள்ள பகுதிகளின் ‘சி.சி.டி.வி’ பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தலா ஐந்து போலீசார் அடங்கிய, ஆறு தனிப் படை குழு அமைக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, இச்சிலை திருட்டு தொடர்பாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், திடீர் ஆலோசனை கூட்டத்திலும் ஈடுபட்டனர். ஏற்கனவே, சிலை திருட்டு வழக்குகளில் கைதாகி, சமீபத்தில் ஜாமினில் வெளி வந்தவர்கள் குறித்த பட்டியலையும், தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை
அவர்களிடம் இருக்கும் தகவல்கள் மற்றும் குற்றவாளிகளின் படங்களின் அடிப்படையில், அவர்களும் விசாரணையை துவக்கி உள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், மர்ம நபர்கள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘மர்ம நபர்கள் விரைவில் சிக்குவர். அவர்களிடம் இருந்து மரகத முருகர் சிலை விரைந்து மீட்கப்படும்’ என, போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
