கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: வி.எஸ்.பாபுவின் வெற்றி குறித்து.. உயர்நீதிமன்றத்தின் இன்று தீர்ப்பு – madras high court to deliver verdict today on the kolathur constituency election case

கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் இந்த வழக்குத் தொடரப்பட்டது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

திருப்போரூர் தொகுதியில் எங்களுக்கு வெற்றி உறுதி! PMK Balu interview

இத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் ஒப்புகைச் சீட்டு (VVPAT) இயந்திரங்களைச் சரிபார்க்கக் கோரி மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை ஏற்று தேர்தல் ஆணையம் 14 இயந்திரங்களைச் சரிபார்த்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இயந்திரங்களைச் சரிபார்த்ததில் பல முறைகேடுகளும் தொழில்நுட்பக் குளறுபடிகளும் நடந்துள்ளது கண்டறியப்பட்டதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்: கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் சீட்டுகளையும் மீண்டும் 100 சதவீதம் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் எனக் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார்.

நீதிமன்றத்தில் கடுமையான வாதங்கள்

இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் தீவிரமான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்ப தெரிவித்த தேர்தல் ஆணையம் மற்றும் வி.எஸ்.பாபு தரப்பு வழக்கறிஞர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தலை எதிர்த்துத் தேர்தல் மனு (Election Petition) மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும், இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டனர்.

இன்று காலை தீர்ப்பு அறிவிப்பு

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், கொளத்தூர் தேர்தல் முறைகேடு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொளத்தூர் தொகுதியின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு என்பதால், இன்றை தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link