போலி இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்கள் முதல், அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகள் வரை, திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு முனைகளில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்நிலையில், இடைத்தரகர்கள், ஊழல் புரியும் ஊழியர்கள், போலி முன்பதிவு இணையதளங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் என அனைத்து வகையான மோசடிகள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிகாரிகளின் தகவலின்படி, பக்தர்களை ஏமாற்றுவதாகக் கூறப்படும் இடைத்தரகர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை 30 குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கோயிலில் ‘தரிசனம்’ பெற்றுத் தருவதாகவும், அதிக விலைக்கு வி.ஐ.பி அறைகளில் தங்குமிட வசதி செய்து தருவதாகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து பக்தர்களை அவர்கள் கவர்ந்திழுப்பதாகவும், பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்களை ஏமாற்றுவது உள்ளிட்ட நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு 43 ஊழியர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது” என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் எதிர்கொண்டு வரும் மற்றொரு முக்கிய சவால் போலி இணையதளங்களாகும். கவர்ச்சிகரமான விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் ‘தரிசனம்’, அறை ஒதுக்கீடு தொடர்பான பொய்யான வாக்குறுதிகளைப் பயன்படுத்தி செயல்பட்ட 249 போலி இணையதளங்களை தேவஸ்தானம் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் இரண்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த அனைத்து போலி இணையதளங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெற்றிகரமாக முடக்கியுள்ளது” என்று கண்காணிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஓர் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இணையத்தில் தோன்றும் போலி இணையதளங்கள் மற்றும் இணைப்புகள் குறித்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேவைகள், தரிசனம், தங்குமிடம் மற்றும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வ திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பரவி வரும் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம் (devasthanam.online) என்ற இணையதளம் போலியானது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம்-ன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேவைகளைப் போன்ற தோற்றத்தில், டொமைன் பெயரில் சிறிய மாற்றங்களை மட்டும் செய்து சிலர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பக்தர்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகள் கிடைப்பதாக இந்த இணையதளம் தவறான தகவலை வெளியிடுகிறது. இந்த போலி இணையதளத்தை உடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட டொமைன் தளத்தின் நிர்வாகிகளிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. மேலும், திருமலை டூ டவுன் காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வாரம், எஸ்.சி.பி டெவலப்பர்ஸ் (‘SCP Developers’) என்ற நிறுவனத்துக்கு எதிராக திருமலை திருப்பதி தேவஸ்தானம் காவல்துறையில் புகார் அளித்து சட்ட நடவடிக்கையைத் தொடங்கியது. திரப்பதிதி நெடுஞ்சாலையில் மனைகள் வாங்குபவர்களுக்கு, கோயிலில் “வாழ்நாள் முழுவதும் ஸ்ரீவாரி வி.ஐ.பி பிரேக் தரிசனம்” வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த தனது வணிக விளம்பரத்தையும் நீக்கியுள்ளது. இதற்கிடையில், தொழில்நுட்ப ரீதியாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோயில் நுழைவாயிலில் 261 ட்ரோன்கள் மற்றும் 105 மெட்டா ஸ்மார்ட் க்ளாசஸ் (‘Meta Smart Glasses’) கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
