”விளக்கைத் தொடமாட்டேன்”; பயணியின் பிடிவாதம்; கைது செய்த காவல்துறை

மத்தியப் பிரதேச மாநில குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் கரீபா (55). இவர் டெல்லியில் இருந்து மைசூர் செல்லும் ”ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்” ரயிலில் பயணித்தார். முதல் வகுப்பு ஏசி பெட்டியில் அமர்ந்திருந்த அவர், நள்ளிரவில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் திடீரென தனது பையில் இருந்து தீப்பெட்டி, பித்தளை விளக்கு, மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துள்ளார். பின்பு, விளக்கை ஏற்றி வழிபடத் தொடங்கியுள்ளார்.  

திடீரென ரயிலில் நெருப்பைக் கண்ட பயணிகள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இது போன்று ரயிலில் தீயைப் பற்ற வைக்கக் கூடாது. அது தீ விபத்தை ஏற்படுத்திவிடும். அதனால், அதை உடனடியாக அணையுங்கள் என்று எச்சரித்தார். ஆனால், அந்த பயணி ”என் பூஜை முடியும் வரை விளக்கைத் தொட மாட்டேன்” எனப் பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனிடையே, டிக்கெட் பரிசோதகர் நடந்த சம்பவத்தைத் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார்.  

இதனைத்தொடர்ந்து, அடுத்த நிறுத்தமான புசாவல் ரயில் நிலையம் வந்ததும், அந்தப்பயணி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். பின்பு, அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்த தீப்பெட்டி மற்றும் விளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவர் மீது ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்களுக்குள் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, ஊதுபத்தி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்று ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link