தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே அரங்கேறிய வார்த்தைப்போர் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம் என்றாலும், இன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக மோதிக்கொண்ட விதம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
“3 நாள் டைம் தர்றேன், தயாராகி வாங்க!” – உதயநிதி ஸ்டாலின்
இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது தவெக அரசின் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நன்றாக தயாராகி வர வேண்டும்; வரும் திங்கள்கிழமை இதற்கெல்லாம் அவர் முறையான பதிலுரையை வழங்க வேண்டும்” என மேஜையைத் தட்டிப் பேசினார்.
“நான் பேசும்போது ஓடக்கூடாது; Promise பண்ணுங்க!” – முதல்வர் விஜய் அதிரடி
உதயநிதி ஸ்டாலினின் இந்த சவாலுக்கு உடனடியாக மைக் பிடித்து பதிலடி கொடுத்தார் முதல்வர் விஜய். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை நான் அவையில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கமளிப்பேன். நான் தற்சமயம் பேரவையில் இல்லை என்றாலும், நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் எனக்கு உடனுக்குடன் வந்து சேர்ந்துவிடும்.
ஆனால், உங்கள் மூலமாக எதிர்க்கட்சியினரிடம் நான் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். திங்கள்கிழமை நான் பதில் பேசும்போது அவையில் இருக்கும் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது; அதற்கு எனக்கு ஒரு Promise (சத்தியம்) செய்து தர வேண்டும்” எனத் தனது பாணியில் அதிரடியாக சவால் விடுத்தார்.
“இப்போ யார் ஓடிப்போனாங்க?” – அடுத்த நொடியே அம்பு விட்ட உதயநிதி!
தன்னுடைய சவாலை முன்வைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் முதலமைச்சர் விஜய் அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் வெளியேறிய உடனே மைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின், அவரை கலாய்த்துப் பேசினார்.
“யாரும் ஓடக்கூடாது என்று சவால் விட்டுவிட்டு, அவையில் இருந்து முதலமைச்சர் விஜய் தற்பொழுது வெளியேறியுள்ளார். இப்போது கடைசியாக அவையை விட்டு யார் ஓடிப்போனார்கள் என்பதை மக்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள். நான் அவரிடம் 3 நாட்கள் நன்றாக தயாராகி வாருங்கள் என்றுதான் கூறினேன்” என உதயநிதி பதிலடி கொடுக்க, அவையில் சிரிப்பலையும் பரபரப்பும் ஒருசேரத் தொற்றிக்கொண்டது.
