தற்போதுள்ள பழைய முறைப்படி நான்கு அடுக்கு சரிபார்ப்பு இருந்தது. இந்நிலையில் இது மூன்று அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்காக வருவாய் சான்றிதழ்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தாசில்தார்களுக்கு விண்ணப்பங்களின் பணிச்சுமை அதிகரித்து, சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில், இனிவரும் காலங்களில் தற்போதுள்ள கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் என்ற நான்கு அடுக்கு சரிபார்ப்பு முறை மாற்றப்பட்டு, மூன்று நிலைகளில் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் வருவாய் வட்டாட்சியர்களின் (Regular Thasildhar) பணிச்சுமையைக் குறைத்து, அவர்கள் சட்டம்-ஒழுங்கு மற்றும் நில விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த ஏதுவாக இந்த அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம் சான்றிதழ்கள் விரைவாகக் கிடைக்கும். தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
