புதிய ஜி.டி.பி., கணக்கீடு: மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ந்துள்ளதாக புதிய ஜி.டி.பி., தரவுகள் வெளியாகின. ஆனால், கடந்த ஆண்டின் கணக்கீட்டு மதிப்பில் செய்யப்பட்ட திருத்தமே இந்த கூடுதல் வளர்ச்சிக்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது.

பழைய கணக்கீட்டின்படி, 2025-26 முதல் காலாண்டு ஜி.டி.பி., 86.05 லட்சம் கோடி ரூபாயாகும். புதிய கணக்கில் அது 80 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஜி.டி.பி., 88.27 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பழைய மதிப்போடு ஒப்பிட்டால் உண்மையான வளர்ச்சி 2.60 சதவீதம் மட்டுமே என முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திரா கார்க் விமர்சித்திருந்தார்.

இதை மறுத்துள்ள மத்திய அரசு, பழைய கணக்கீடு 2011–12 அடிப்படை ஆண்டை கொண்டது. புதிய தரவுகள் 2022–23 அடிப்படை ஆண்டின்படி கணக்கிடப்பட்டவை.

முற்றிலும் மாறுபட்ட இரண்டு அடிப்படை ஆண்டுகளை ஒப்பிடுவது தவறு என்று கூறியது.மேலும், வளர்ச்சியை அதிகமாக காட்ட பழைய தரவுகள் குறைக்கப்படவில்லை என்றும், வாகன விற்பனை, சிமெண்ட் மற்றும் ஸ்டீல் துறைகளில் உள்ள வலுவான வளர்ச்சி, 7.80 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியோடு கச்சிதமாக ஒத்துப்போகிறது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஆப்பிளை ஆப்பிளுடன் தான் ஒப்பிட வேண்டுமேயன்றி, ஆரஞ்சுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று, சுபாஷ் சந்திரா கார்க் கருத்துக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.

Source link