கோவில் வரவு-செலவு கணக்குகளை பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

மதுரை: ‘ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்கள், வரவு – செலவு உள்ளிட்ட விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்’ என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோவில் ஒன்றில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் தராதது குறித்த விசாரணை, மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தலைமையில் நடந்தது. இதில், சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றின் விபரம்:

தகவல் ஆணையத்தில், இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறநிலையத்துறை சார்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலர் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு பெறுகின்றனர்.

தற்போதைய ஏஐ காலத்திலும் கோவில் நிர்வாகம் குறித்த தகவல்களை, 30 நாட்கள் காத்திருந்து பெறுவது வருந்தத்தக்கது. தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு 4ன் கீழ், அறநிலையத்துறை கீழ்க்கண்ட விபரங்களை அனைத்து கோவில்களிலும் வெளியிட வேண்டும்.

கோவில் சொத்துக்கள், வரவு- செலவு விபரங்கள், வைப்பு நிதி, நிரந்தர சேமிப்பு விபரம், உலோகப்பொருட்கள், உபயதாரர்கள் நன்கொடை விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

கோவில் வரலாறு, சிறப்புகள் குறித்தும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பூஜை, திருவிழாக்கள் விபரம், பணியாளர்கள், அர்ச்சகர்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டும். அறங்காவலர்கள் குழு தீர்மானங்கள், அரசாணைகள், சுற்றறிக்கை உள்ளிட்டவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link