நேபாள சுரங்கத்தில் சிக்கி 9 நாள் தவித்த 2 பேர் உயிருடன் மீட்பு!

காத்மாண்டு:நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், திரிசூலி நீர் மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கி, ஒன்பது நாட்களாக தவித்த தொழிலாளர்கள் இருவர், உயிருடன் நேற்று மீட்கப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லையில், இமயமலை தொடரில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தில் இருந்த மாபெரும் பனிப்பாறையின் ஒருபகுதி, ஆக., 26ல் திடீரென சரிந்து விழுந்தது.

இதன் காரணமாக உருவான மாபெரும் பனி, மண் மற்றும் பாறைகள் நதிக்குள் சரிந்து, மிகக் கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது லெண்டே கோலா நதியில் விழுந்தது.

இந்த நதி, நேபாளத்தில் பாயும் திரிசூலி நதியுடன் இணைவதால், அங்கு மாபெரும் வெள்ளம் சீறி பாய்ந்து, வந்த வேகத்தில், சீன - நேபாள எல்லையில் உள்ள கியிரோங் சோதனை சாவடி, பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது.

குறிப்பாக, அப்பகுதியில் இருந்த நீர் மின் திட்டங்களின் சுரங்கங்களுக்குள் தண்ணீர் மற்றும் சேறு புகுந்ததால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

இந்நிலையில், மத்திய நேபாளத்தில் உள்ள திரிசூலி 3ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கத்திற்குள் இருந்து மனித குரல்கள் கேட்பதை கண்டறிந்த நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியை தீவிரப் படுத்தினர். மீட்புப் படையினரின் தொடர் முயற்சியின் காரணமாக, சுரங்கத்திற்குள் 558 அடி துாரத்தில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சஞ்சய் ஷா 30, கபீர் மகர்ஜன், 45 என, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த மகர்ஜன் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்கு மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சஞ்சய் ஷா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாய்ப்பில்லை

விபத்தில் சிக்கியது குறித்து ஷா கூறியதாவது:

விபத்து நடந்த அன்று நான் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தேன். அனைவரின் பாதுகாப்பிற்கும் நான் பொறுப்பானவன் என்பதால், பேரிடர் ஏற்பட்டபோது மற்றவர்களை அங்கிருந்து தப்பியோடவலியுறுத்தினேன்.கடைசியில் நான் வெளியேற நினைத்த போது சிக்கிக் கொண்டேன். அனைவரும் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை.

பாராட்டுகள்

இது நீண்ட சுரங்கம் என்பதால் மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம். உயிரை பணயம் வைத்து எங்களை மீட்ட மீட்பு படையினருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விடா முயற்சியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஒன்பது நாட்களுக்கு பின் இருவரை உயிருடன் மீட்ட மீட்புப் படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Image 1615974

600 குழந்தைகள் மாயம் பலி எண்ணிக்கை 1,282

நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடரில் சிக்கி ரசுவா மற்றும் நுவாகோட் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் உள்ளூர் கல்வி மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் பள்ளிகள் வழங்கிய தகவல்களின்படி, ரசுவா மாவட்டத்தில் 280 குழந்தைகளும், நுவாகோட்டில் 350 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். இப்பகுதிகளில் உள்ள பல பள்ளிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த திடீர் பேரிடரில் சிக்கி 22 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களில் உள்ள 22 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாகவும், இதில் 12 பள்ளிகள் முழுமையாக தரைமட்டமாகி உள்ளதாகவும் கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது. 600 குழந்தைகள் உட்பட 4,798 பேர் மாயமாகி உள்ளனர்.

டி.என்.ஏ., பரிசோதனை
திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி காணாமல் போன இந்தியர்களை அடையாளம் காண்பதற்காக அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்யும் வசதியை நம் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், காணாமல் போனவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் உடன்பிறந்தோர் உள்ளிட்ட உறவினர்கள், மத்திய மற்றும் மாநில தடயவியல் அறிவியல் ஆய்வகங்கள், தேசிய தடயவியல் அறிவியல் பல்கலை ஆய்வகங்கள் மற்றும் டி.என்.ஏ., பரிசோதனை வசதி கொண்ட அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் தங்கள் உயிரியல் மாதிரிகளை அளித்து டி.என்.ஏ., விபரக்குறிப்புகளை தயாரித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ., சுய விபரத்தின் நகலை காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகத்தின் ஒருங்கிணைப்புக்காக, eoikathmandufloodsupport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், இது தொடர்பான உதவிகளுக்கு +9779841616095 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link