மாணவர் சேர்க்கை படிவத்தில் ஜாதி, மத அடையாளங்கள் கட்டாயமில்லை: ஐகோர்ட்

மதுரை: ‘கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையின் போது, விண்ணப்ப படிவத்தில் ஜாதி, மத அடையாளகங்ளை குறிப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர், இனாம்ரெட்டியபட்டி விக்ரமன் தாக்கல் செய்த மனு: தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் ஜாதி விபரங்களை கேட்க கூடாது என விதி உள்ளது. அதைமீறி கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையின்போது, ஜாதி உட்பட, சமூக விபரங்கள் கேட்கப்படுகின்றன. இது மாணவர்களின் தேர்வு, சேர்க்கை செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

எனவே, தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவன விண்ணப்ப படிவங்களில், ஜாதி அல்லது சமூக விபரங்களை கட்டாயமாக சேகரிக்க தடை விதிப்பதோடு, தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதி செய்திட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ‘விண்ணப்பத்தில் ஜாதி உட்பட, விபரங்களை கட்டாயமாக பெறக் கூடாது என்பது குறித்து, கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா’ என, கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு: ஜாதி, மத அடையாளங்களை, கட்டாயம் கேட்க கூடாது என, பள்ளிகளை தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி, தனியார் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நீதிபதிகள், ‘பள்ளிகளில் ஜாதி, மத அடையாளங்ளை குறிப்பிட கட்டாயப்படுத்த கூடாது. இதுதொடர்பான அரசாணையை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என, இதுபோன்ற மற்றொரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே தீர்ப்பை, இவ்வழக்கில் குறிப்பிடுகிறோம்’ என, உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Source link