ஊதிய நிலை வாரியாக அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் குறித்த கணக்கீடுகள் இதோ.. இறுதி முடிவு அரசின் கையில்.
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி மற்றும் HRA விகிதங்களில் செய்யப்படவுள்ள மாற்றங்கள், லெவல் 1 முதல் 5 வரையிலான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை எவ்வளவு உயர்த்தும்? முழுமையான கணக்கீட்டை இங்கே பார்ப்போம்.
வீட்டு வாடகைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகளில் வீட்டு வாடகைப்படி (HRA) என்பது ஒரு முக்கிய அங்கமாகும். பணவீக்கம் மற்றும் நகரங்களில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைகளைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் நீண்ட காலமாக இதில் திருத்தம் செய்யக் கோரிக்கை வைத்து வருகின்றனர். 7ஆவது ஊதியக் குழுவின் கீழ், X, Y மற்றும் Z ஆகிய வகைகளைச் சேர்ந்த நகரங்களுக்கு முறையே 30%, 20% மற்றும் 10% என்ற விகிதத்தில் HRA வழங்கப்படுகிறது.
அரசிடம் முக்கிய கோரிக்கை!
இருப்பினும், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் வீட்டு வாடகைகள் மிக வேகமாக அதிகரித்து வருவதால், தற்போதைய HRA தொகை போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர். இந்தச் சூழலைச் சரிசெய்ய, பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் 8ஆவது ஊதியக் குழுவிடம் மனுக்களையும் முன்மொழிவுகளையும் அளித்துள்ளன. அவற்றில் HRA விகிதங்கள் மற்றும் வரம்புகளைக் கணிசமாக உயர்த்துமாறு வலுவாகப் பரிந்துரைத்துள்ளன.
ஃபிட்மென்ட் காரணி மற்றும் கணக்கீடுகள்!
8ஆவது ஊதியக் குழுவில் முன்மொழியப்பட்ட 2.1 ஃபிட்மென்ட் காரணி அங்கீகரிக்கப்பட்டு, X-வகை பெருநகரங்களில் HRA விகிதம் தற்போதைய 30 சதவீதத்தில் இருந்து அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டால், கீழ் மற்றும் நடுத்தர நிலையில் (ஊதிய நிலைகள் 1 முதல் 5 வரை) உள்ள ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். வெவ்வேறு ஊதிய நிலைகளில் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஊதிய நிலை 1 (மாதாந்திர உயர்வு: ரூ. 9,720):
தற்போது, நிலை 1 ஊழியர் ஒருவரின் ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆகும். இதற்கு 30 சதவீதத்தில் ரூ. 5,400 HRA கிடைக்கிறது. 2.1 ஃபிட்மென்ட் காரணியைப் பயன்படுத்திய பிறகு, கணிக்கப்படும் புதிய அடிப்படை ஊதியம் ரூ. 37,800 ஆக இருக்கும். இந்த புதிய அடிப்படை ஊதியத்தில் 40 சதவீத HRA-வைக் கணக்கிட்டால் அது ரூ. 15,120 ஆக அமையும். இதன் மூலம், மாதந்தோறும் HRA-வில் ரூ. 9,720 நேரடி உயர்வு கிடைக்கும்.
ஊதிய நிலை 2 (மாதாந்திர உயர்வு: ரூ. 10,746):
இந்த ஊதிய நிலையில், ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ. 19,900 மற்றும் அவர்கள் பெறும் வீட்டு வாடகைப்படி ரூ. 5,970 ஆகும். புதிய அடிப்படை ஊதியம் ரூ. 41,790 ஆக இருக்கும்போது 40 சதவீத HRA சுமார் ரூ. 16,716 ஆக இருக்கும். இதனால், ஊழியர்கள் மாதத்திற்கு ரூ. 10,746 கூடுதல் பலனைப் பெறுவார்கள்.
ஊதிய நிலை 3 (மாதாந்திர உயர்வு: ரூ. 11,718):
தற்போது, இந்தப் பிரிவினருக்கான அடிப்படை ஊதியம் ரூ. 21,700 மற்றும் HRA ரூ. 6,510 ஆகும். புதிய அடிப்படை ஊதியம் ரூ. 45,570 ஆக உயரும்போது 40 சதவீத விகிதத்திலான HRA ரூ. 18,228 ஆக மாறும். இதன் விளைவாக மாதாந்திர வருமானத்தில் ரூ. 11,718 உயர்வு ஏற்படும்.
ஊதிய நிலை 4 (மாதாந்திர உயர்வு: ரூ. 13,770):
நிலை 4 ஊழியர்களுக்கான தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ. 25,500 ஆகும். இதன் மூலம் ரூ. 7,650 HRA கிடைக்கிறது. 2.1 ஃபிட்மென்ட் (fitment) அடிப்படையில், புதிய அடிப்படை ஊதியம் ரூ. 53,550 ஆக இருக்கும். இதில் 40% HRA என்பது ரூ. 21,420 ஆகும்; இது மாதத்திற்கு ரூ. 13,770 என்ற நேரடி HRA உயர்வாக அமைகிறது.
ஊதிய நிலை 5 (மாதாந்திர உயர்வு: ரூ. 15,768):
இந்த ஊதிய நிலையில் உள்ள ஊழியர்கள் தற்போது ரூ. 29,200 அடிப்படை ஊதியத்தையும், ரூ. 8,760 வீட்டு வாடகைப்படியையும் (HRA) பெறுகிறார்கள். புதிய அடிப்படை ஊதியம் ரூ. 61,320 ஆக உயரும்போது, 40 சதவீத HRA ரூ. 24,528 ஆக இருக்கும். அதாவது, ஊதிய நிலை 5-ல் உள்ள ஊழியர்கள் மாதத்திற்கு ரூ. 15,768 அல்லது ஆண்டுக்கு சுமார் ரூ. 1.89 லட்சம் என்ற கணிசமான கூடுதல் HRA பலனைப் பெற முடியும்.
முடிவு அரசின் கையில்!
இந்த விஷயத்தில் இறுதி முடிவு என்பது ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமையும். தற்போதைய நிலையில், 2.1 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் மற்றும் 40 சதவீத வீட்டு வாடகைப்படி விகிதங்கள் ஆகியவை பல்வேறு ஊழியர் சங்கங்கள் முன்வைத்த முன்மொழிவுகளின் அடிப்படையில் அமைந்த மதிப்பீடுகளே ஆகும். 8ஆவது ஊதியக் குழுவின் இறுதி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு, மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பின்னரே ஊதியம் மற்றும் வீட்டு வாடகைப்படியில் ஏற்படவுள்ள உண்மையான உயர்வு குறித்த தெளிவான விவரங்கள் தெரியவரும்.
