சென்னை: நவ. 1ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று 2025ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
அதில், பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம், தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும், 3 மாதம் அவகாசம் வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, கடைசி வாய்ப்பாக நவ.1ம் தேதிக்குள் கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும், கெடு காலத்திற்குள் வைக்க தவறினால் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
