சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்; இந்தியர் கோரிக்கையை அங்கீகரித்தது ஐ.நா.,

புதுடில்லி: நம் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தை திருமண ஒழிப்பு பிரசாரகர் புவன் ரிபு முன்னெடுப்பின் காரணமாக, நவ., 27ஐ சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா., அறிவித்தது.

குழந்தை திருமணத்தை தடுக்கவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், குழந்தை உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும், டில்லியைச் சேர்ந்த புவன் ரிபு, குழந்தை திருமணத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த, தனி சர்வதேச தினம் தேவை என, வலியுறுத்தினார்.

நம் நாட்டில் ஆண்டுதோறும் நவ., 27ல், குழந்தை திருமணம் இல்லா இந்தியா என்ற பிரசாரம் நடத்தப்படுகிறது. அதே தினத்தை சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என, புவன் ரிபு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான தீர்மானத்தை, மேற்கு ஆசிய நாடான சியரா லியோன் ஐ.நா.,வில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இது அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டது. ஐ.நா.,வின் புதிய அறிவிப்பை புவன் ரிபு வரவேற்றுள்ளார். ”இந்தியாவின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்துக்கு இது முக்கியமான தருணம்,” என அவர் குறிப்பிட்டார்.

Source link