இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவுகளில் சமரசம் கிடையாது; மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த எங்களது நிலைப்பாடு தெளிவானது; சமரசத்திற்கு உட்படாதது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தின் உண்மையான பரப்பளவு எப்படி உள்ளதோ, அதற்கேற்ப பெரிதாக காட்டும் புதிய உலக வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா., பொதுச்சபை ஏற்றது. இதற்கு, 164 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா எதிர்த்தது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியதாவது:

புதிய உலக வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற ஐநாவின் தீர்மானத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்மானம் எந்தவொரு குறிப்பிட்ட உலக வரைபடத்தையும் ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது அங்கீகரிக்கவோ இல்லை; இது சர்வதேச எல்லைகள், சர்ச்சைக்குரிய பகுதிகள் அல்லது இடப் பெயர்கள் உள்ளிட்ட அரசியல் வரைபடவியலையும் குறிப்பிடவில்லை.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உட்பட இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதிகள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும். எந்தவொரு தவறான அல்லது திசைதிருப்பும் சித்தரிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த எங்களது நிலைப்பாடு தெளிவானது; சமரசத்திற்கு உட்படாதது. இவ்வாறு ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளார்.

Source link