அமைச்சர்கள், துறைகளின் செயல்பாடுகள்; பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 7) திங்கள் கிழமை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி, துறைவாரியான முன்னேற்றம், அமைச்சர்களின் செயல்திறன் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு நாளை திங்கள்கிழமை மாலை தலைமை தாங்க உள்ளார். மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முக்கியக் கூட்டம் நடைபெறுகிறது.

டில்லியில் நடக்கும் இக்கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் தங்களது அமைச்சகங்களின் செயல்திறன் அறிக்கைகளுடன் பங்கேற்கின்றனர். முக்கியமாக கல்வி, விவசாயம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது.

அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலவரம், இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்திறன் குறித்தும் பிரதமர் மோடி நேரடியாக மதிப்பாய்வு செய்கிறார்.

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும், அமைச்சகங்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கவும் இந்த செயல்திறன் ஆய்வு நடத்தப்படுகிறது. நலத்திட்டங்களை வழங்குவது என்பது இனி வெறும் திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்ல; செயல்திறன், செயலாக்கம் மற்றும் தாக்கம் ஆகியவை குறித்து மதிப்பாய்வு செய்ய கூட்டம் நடைபெறுகிறது.

Source link