ரஷ்ய ராணுவத்தில் இணைய நெருக்கடி கொடுத்து இந்திய இன்ஜினியருக்கு காவல்; கதறும் மனைவி

கான்பூர்: ரஷ்ய ராணுவத்தில் இணையுமாறு நெருக்கடி கொடுத்து, இந்தியாவைச் சேர்ந்த இன்ஜினியரை தடுப்பு காவலில் வைத்துள்ளதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டு, அரசிடம் உதவி கேட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஆள்பற்றாக்குறையை போக்குவதற்காக, இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினவர் வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் 227 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 139 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவில் தன்னுடைய கணவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தில் சேருமாறு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறி, உத்தரபிரதேசம் கான்பூரைச் சேர்ந்த இன்ஜினியரான சந்தன் குப்தாவின் மனைவி சினேகா சந்தன் குப்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; எந்தத் தவறும் செய்யாத தனது கணவரை போலீசார் சிறையில் அடைத்துவிட்டு, ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ரஷ்ய மொழி தெரியாததால் நிலைமையைப் புரிந்துகொள்ள முடியாமல் என்னுடைய கணவர் தவித்து வருகிறார். எனக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எனது கணவரைப் பாதுகாப்பாக மீட்டு, பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனடியாக தலையிட வேண்டும், என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link