டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 96.84 டாலராக உயர்ந்தது. இதற்கான காரணங்கள் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 7 காசுகள் சரிந்து 94.50 என்ற அளவில் முடிவுற்றது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமான உலகளாவிய காரணிகள் ரூபாய் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தின. எனினும், வலுவான எஃப்சிஎன்ஆர் (FCNR) டாலர் வரத்து ஆதரவை வழங்கியது. வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு உயர்ந்தது. இருப்பினும் உள்நாட்டு பங்குச் சந்தையின் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்த லாபம் குறைந்து ரூபாய் மதிப்பு 94.50 என்ற அளவில் நிறைவடைந்தது.
ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு உயர்வு!
இண்டர் பேங்க் அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் 94.40 என்ற விலையில் திறக்கப்பட்டது. வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 94.38 என்ற அள்வைத் தொட்டது. அதைத் தொடர்ந்து ரூபாயின் மீது அழுத்தம் அதிகரித்து, குறைந்தபட்சமாக 94.50 வரை சென்றது. இறுதியாக 94.50 ரூபாயில் நிறைவடைந்த்து. முந்தைய வர்த்தக அமர்வில் ரூபாய் 8 காசுகள் அதிகரித்து டாலருக்கு எதிராக 94.43 ரூபாயில் முடிவுற்றிருந்தது. இதனால், திங்கட்கிழமை தொடக்கத்தில் கிடைத்த லாபம் வர்த்தகத்தின் முடிவில் காணாமல் போனது.
அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையின் அழுத்தம்!
சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தது ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.58 சதவீதம் உயர்ந்து 96.84 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது டாலருக்கான தேவையை அதிகரித்து ரூபாயின் மீது அழுத்தத்தை உருவாக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, உள்நாட்டுச் சந்தையின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை ரூபாயின் ஏற்ற வரம்பைக் கட்டுப்படுத்தின.
டாலர் குறியீடு சரிவு!
மறுபுறம், திங்கட்கிழமை அன்று டாலர் குறியீடு பலவீனமடைந்தது. ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பை அளவிடும் டாலர் குறியீடு 0.27 சதவீதம் சரிந்து 98.90 ஆனது. பலவீனமான டாலர் பொதுவாக ரூபாய் போன்ற வளர்ந்து வரும் சந்தை நாணயங்களுக்கு ஆதரவை வழங்கும். வெளிநாட்டு மூலதன வரத்தும் ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாயை ஆதரித்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையின் சரிவு இந்த ஆதரவைக் குறைத்தன.
அமெரிக்கா – ஈரான் பதற்றங்களை உற்றுநோக்கும் சந்தைகள்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றங்களையும் சந்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஹார்மூஸ் ஜலசந்தி தொடர்பாக ஓமனுடனான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில் ஒரு தீர்வு எட்டப்பட்டால் கச்சா எண்ணெய் விலைகள் நிவாரணம் அளிக்கலாம். இது ரூபாய்க்கும் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றங்கள் அதிகரித்தால் ரூபாய் மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகலாம் என்கின்றனர்.
உள்நாட்டுப் பங்குச் சந்தை வீழ்ச்சியின் தாக்கம்!
திங்கட்கிழமை அன்று இந்தியப் பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 382.62 புள்ளிகள் சரிந்து 76,132.81 என்ற அளவில் முடிவுற்றது. நிஃப்டி 118.55 புள்ளிகள் சரிந்து 23,779.15 புள்ளிகளில் நிறைவடைந்தது. உள்நாட்டுப் பங்குச் சந்தையின் பலவீனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மனநிலையைப் பாதிக்கலாம். முன்னதாக, வெள்ளிக் கிழமை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியப் பங்குச் சந்தையில் ரூ. 3,111.94 கோடி மதிப்பிலான பங்குகளை நிகரமாக விற்றனர். இது ரூபாயின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்தது.
சாதனை அளவை எட்டிய அந்நிய செலாவணி கையிருப்பு!
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் வலுவான உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.475 பில்லியன் டாலர் அதிகரித்து சாதனை அளவான 740.803 பில்லியன் டாலரை எட்டியது. இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை இந்தத் தரவுகளை வெளியிட்டது. வலுவான அந்நிய செலாவணி கையிருப்பு நாட்டின் வெளிப்புற நிதி நிலையை ஆதரிக்கிறது. இருப்பினும், வரவிருக்கும் நாட்களில் ரூபாயின் போக்கிற்கு கச்சா எண்ணெய் விலைகளும் உலகளாவிய சந்தைக் குறிப்புகளும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
Source link
