நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்வரின் பதிலுரைக்கு பின்பாக எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனை திமுக எம்எல்ஏக்கள் கண்டித்து அவையிலே தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதாக சொல்லிவிட்டு, சபாநாயகர் திடீரென தனது முடிவினை மாற்றிக்கொண்ட நிகழ்வும் இணையத்தில் பெருமளவில் வைரலானது. இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக கேள்விகளை எழுப்பி விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளிக்கும் போது சர்க்காரிய கமிஷன், மிசா குறித்து பேசினார். அவரின் பேச்சுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதல்வர் பதிலுரையை நிறைவு செய்ததும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி கோரப்பட்டது.
சபாநாயகர் அனுமதி மறுப்பு
ஆனால் அவர்களுக்கு பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதனால் அவரது அறிக்கை முன்பாக அமர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையில் முதல்வர் ஜோசப் விஜய் எதிர்கட்சியை பேச அனுமதி அளிக்குமாறு கூறினார். அதனை தொடர்ந்து சபாநாயகரும் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்து விட்டு, தனது முடிவினை உடனடியாக மாற்றிக்கொண்டார்.
திமுக எம்பி கனிமொழி கேள்வி
இதற்கிடையில் சபாநாயகருக்கு சீட் ஒன்று வழங்கப்பட்ட காரணத்தினாலே அவர் தன்னுடைய முடிவை மாற்றியுள்ளார். அந்த சீட்டை கொடுத்தது யார் என்றெல்லாம் இணையத்தில் கடுமையான விவாதங்கள் கிளம்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், பொதுவாக சட்டமன்றத்தில் முதல்வர் பேசி முடித்த பிறகு எதிர்க்கட்சியில் இருக்கக் கூடியவர்களுக்கு கேள்வி கேட்பதற்கோ, அதைப்பற்றி விவாதிப்பதற்கோ வாய்ப்பு அளிக்கப்படும்.
அரசை வழிநடத்துவது யார்?
அதுதான் மரபு. அதனை நேற்றைய தினம் முதல்வரும் ஏற்றுக்கொண்டார். அதனை தாண்டி சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். அதற்கு பிறகு அவருக்கு எங்கிருந்தோ அறிவுறுத்தல் வந்து, அவர் வாய்ப்பு தர மாட்டேன் என்று சொல்லியுள்ளார். அப்படியென்றால் எல்லாரையும் தாண்டி, சபாநாயகரையும் தாண்டி இந்த அரசாங்கத்தை வழிநடத்துவது யார்? என்று காட்டமாக கேள்வியை முன்வைத்துள்ளார் கனிமொழி எம்பி.
உதயநிதி எழுப்பிய கேள்வி…சபாநாயகர் சொன்ன பதில்!
ஒரு பைசாவுக்கு பெறாத ரிப்போர்ட்
மேலும் சர்க்காரியா கமிஷன் குறித்தும் பேசியுள்ள கனிமொழி, ஒரு பைசாவுக்கு பெறாத ஒரு கமிஷன் ரிப்போர்ட். ஐம்பது வருசத்துக்கு முன்னாடி செல்லாது. யாரும் லீகலாக கூட பயன்படுத்த முடியாது என்ற ரிப்போர்ட்டை படிச்சுட்டு, அதுதான் யூனிவர்சல் டூரோத் என முதல்வர் பேசியுள்ளார். மிசாவை கொச்சைப்படுத்துகிறார். நாடு முழுவதும் எமர்ஜென்சியை எதிர்த்து போராடி சிறைக்கு சென்றுள்ளனர். இதற்கெல்லாம் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்கிற ஒரு இடமாக சட்டமன்றம் உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு முதல்வரின் பேச்சு மிகவும் மலிவானது எனவும் அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
