சகோதரனை பார்க்க போன எனக்கு கிடைத்த அதிஷ்டம்; ‘அவ்வை சண்முகி குழந்தை நட்சத்திரம் இப்போ எப்படி இருக்கார்?

ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தனது சகோதரரை சந்திக்க சென்றபோது கமல்ஹாசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் முதலில் ஆண் குழந்தை தான் நடிப்பதாக இருந்தது. எனக்கு அதிஷ்டம் இருந்ததால் நான் நடித்தேன் என்று, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கூறியுள்ளார். 

சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதுமுக நடிகர் நடிகைள் வரவு அதிகரித்து வருகிறது. அதே சமயம் குழந்தை நடிகர்களில் வரவும் அதிகமாகத்தான் உள்ளது. இப்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் நேரடியாக சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், சமூகவலைதளங்களில் இல்லாத காலக்கட்டத்தில், பல குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துள்ளனர்.

அந்த வகையிலான ஒரு குழந்தை நட்சத்திரம் தான் பேபி ஆனி (அன் அலெக்சியா). இவர் எந்த படத்தில் நடித்துள்ளார் என்று கேட்கிறீர்களா, கமல்ஹாசன் மீனா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக இவர் தான் நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று பெயரேடுத்த கே.எஸ்.ரவிக்குமார், முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்த படம் தான் அவ்வை சண்முகி.

ஜெமினி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், ஹீரா ராஜகோபால், டெல்லி கணேஷ், நாசர், மணிவண்ணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். குழந்தையுடன் பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த, அவரது வீட்டிலேயே பெண் வேடம்போட்டுக்கொண்டு வேலை செய்யும் கேரக்டரில் கமல்ஹாசன் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார். படமும் பெரிய ஹிட் படமாக அமைந்தது,

இந்த படத்தில் மீனா வீட்டில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் முதன் முதலில் வரும்போதே அவரது மகள் கண்டுபிடித்துவிடுவார். கமல்ஹாசன் மகளான நடித்த பேபி ஆனிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, வீட்டில் நடக்கும் திருட்டுகளை கண்டுபிடிப்பது, அம்மாவிடம் அப்பாவை விட்டுக்கொடுக்காம் பேசுவது என தனது துருதுரு நடிப்பால் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தவர் பேபி ஆனி.

Kamal Avvai

30 வருடங்கள் கடந்திருந்தாலும், இப்போதும் அவ்வை சண்முகி படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இருந்து வருகிறது. இந்த படத்தின் நடித்த பேபி ஆனி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? தற்போது சோசியல் மீடியா இன்ஃபுளுயன்சராக இருக்கிறார். அவ்வை சண்முகி படத்திற்கு பிறகு, 2000-ம் ஆண்டு ஹேரா பேரி என்ற படத்தில் நடித்திருந்தார். படிப்பு முக்கியம் என்பதால், படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவ்வை சண்முகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசியுள்ள பேபி ஆனி, 3 வயதில் இருந்து நான் விளம்பர படங்களில் நடித்து வருகிறேன். அவ்வை சண்முகி எனது முதல் படம். என் சகோதரரும் விளம்பர படங்களில் நடித்தார். அப்போது ஒருமுறை அவரை பார்க்க நான் ஏ.வி.எம். ஸ்டூடியோ போனபோது அங்கு ரகுராம் மாஸ்டர் மற்றும் கலா மாஸ்டரை சந்தித்தேன். அவர்கள் தான் இந்த படத்தில் ஒரு குழந்தை நடிக்க வேண்டும் நீ நடிக்கிறீயா என்று கேட்டார்கள். முதலில் அந்த படத்தில் ஆண் குழந்தை நடிப்பதாக இருந்தது. ஆனால் எனக்கு அதிஷ்டம் இருந்ததால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.



Source link