எழுதியவர்: ஆனந்து சுரேஷ்
திரையில் ரஜினிகாந்தின் வசீகரத்துக்கு ஈடுகொடுப்பது என்பது கிட்டத்தட்ட யாராலும் முடியாத ஒன்று. குறிப்பாக, 1990-களில் இருந்து அவரது திரைப்படங்களின் மையப் புள்ளியாக அவரே மாறிய காலகட்டத்தில் இது இன்னும் கடினமானதாக இருந்தது. ஆனால், ‘தளபதி’ (1991) திரைப்படத்தில் இயக்குநர் மணிரத்னம், ரஜினிகாந்தின் அசாதாரணமான நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வந்திருப்பார். இதனால் அவருடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு இது இரட்டைச் சவாலாக அமைந்துவிடுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அதே சமயம், தளபதி மம்மூட்டி ஒவ்வொரு காட்சியிலும் ரஜினிகாந்துக்கு இணையாகத் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்தியிருப்பார். மேலும், அவர் தேவாராஜ் கதாபாத்திரத்தை அற்புதமான முறையில் வெளிப்படுத்தி இருப்பார். தேவராஜ், மம்மூட்டியின் வாழ்க்கையில் மிகச் சிறந்த கேரக்டர்களில் ஒன்றாக இருக்காமல் இருக்கலாம். அதற்குக் காரணம், அவர் இதைவிடச் சிறப்பான பல கேரக்டர்களை ஏற்கனே நடித்துவிட்டார்.
ஆனாலும், அவருக்கு அருகிலேயே தனது முழுமையான திரை வசீகரத்துடன் ‘ஆரா’ ரஜினிகாந்த் (Aura + Rajinikanth என்ற சொற்களின் இணைப்பில் உருவான இணையவழிப் பிரபலமான பெயர்) இருக்கும் நிலையிலும், மம்மூட்டி தனது துல்லியமான, அடக்கமான, நுணுக்கமான நடிப்பால் திரையைத் தீப்பற்றச் செய்தார் என்பதை மறுக்க முடியாது. இதனுடன் அவரது கரகரப்பான குரல் ஏற்ற இறக்கங்களும் இணைகின்றன. இது ஓரளவு ‘தி காட்ஃபாதர்’ (1972) திரைப்படத்தில் மார்லன் பிராண்டோவும், ‘அக்னிபத்’ (1990) திரைப்படத்தில் அமிதாப் பச்சனும் பயன்படுத்திய குரல் பாணியை நினைவூட்டுகிறது.
தேவராஜின் உணர்ச்சிகளை மம்மூட்டி வெளிப்படுத்தும் விதம் மிகவும் சிறப்பானது. ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும், மற்றொரு கட்டத்தில் மிகக் குறைந்த வெளிப்பாட்டுடனும் நடிக்க வேண்டிய தருணங்களை அவர் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கிறார். இது நடிப்புக் கலையில் அவருக்குள்ள ஆழமான தேர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
தேவராஜின் மனிதத்தன்மைக்கான திறவுகோல் – சூர்யா
‘தளபதி’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் தேவராஜ் (மம்மூட்டி) மிகவும் எச்சரிக்கையுடனும் மர்மமான தோற்றத்துடனும் இருப்பார். அவர் பேசும் வார்த்தைகளின் உள்ளடக்கத்தைத் தவிர, அவரது முகபாவனைகள் மூலம் அவரை புரிந்துகொள்வது கடினம். அவரது தாழ்ந்த குரல் தொனியில் பேசும் விதம், அவருடைய அச்சமூட்டும் தன்மையை மேலும் அதிகரிக்கிறது. அவர் பேசத் தொடங்கும் தருணத்தில் அவரைச் சுற்றியுள்ள அனைவரும், அனைத்தும் அமைதியாகிவிடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.
அவர் உண்மையாகப் புன்னகைப்பதை முதன்முறையாக நாம் காணும் தருணம், அவரது மனைவி செல்வி (கீதா) முன்னிலையில் இருக்கும்போதுதான். அப்போது தனது புதிய நெருங்கிய நண்பரான சூர்யாவை (ரஜினிகாந்த்) அவர் தனது மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறார். அந்தத் தருணத்தில் இருந்து, சூர்யாவுடன் இருக்கும்போதோ அல்லது தனது நண்பனுக்காகப் பேசும்போதோ தேவராஜின் உணர்ச்சிகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். உதாரணமாக, சுப்புலட்சுமியின் (ஷோபனா) வீட்டிற்குச் சென்று, அவரது தந்தை (சாருஹாசன்) முன் சூர்யாவைத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளும் காட்சியை குறிப்பிடலாம்.
சூர்யாவுடன் இருக்கும்போது தேவராஜ் தனது மகிழ்ச்சி, துக்கம், கோபம், வருத்தம், மனவேதனை ஆகிய அனைத்தையும் எந்தத் தடையுமின்றி வெளிப்படுத்துகிறார். தனது மனைவியின் முன்னிலையில் இருப்பதைப் போலவே, தனது நெருங்கிய நண்பனின் முன்னாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவர் அஞ்சுவதில்லை என்பது போலத் தோன்றுகிறது. சூர்யா, தேவராஜுக்குள் மறைந்திருக்கும் மனிதனை வெளிக்கொண்டு வருகிறார் என்று சொல்லலாம்.
அதே சமயம் தேவராஜின் அந்த மர்மமான, இறுக்கமான முகபாவனை மீண்டும் வெளிப்படும் மற்றொரு முக்கியமான காட்சியும் உள்ளது. திரைப்படத்தின் இறுதிப்பகுதியில், சூர்யா கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும், கலெக்டர் அர்ஜுனைக் (அரவிந்த் சுவாமி) கொல்லும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தேவராஜிடம் கூறுகிறார். அப்போது தேவராஜின் அச்சமூட்டும் தன்மை மீண்டும் வெளிப்படுகிறது.
அதற்கு முந்தைய காட்சிகளில் காவல்துறையினர் தேவராஜை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையாகத் தாக்கியபோது, அவருக்குள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அரக்கனை அவர்கள் அறியாமலேயே விடுவித்துவிட்டார்களோ என்ற உணர்வை அந்தக் காட்சி ஏற்படுத்துகிறது. அர்ஜுனைக் கொல்ல வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு சூர்யா எதிர்ப்பு தெரிவிக்கும்போது, தேவராஜ் மீண்டும் அதே மர்மமான முகத்துடன் அவரிடம் பேசுகிறார். அவர்கள் முதன்முதலில் சந்தித்தபோது, இருவரும் எதிரிகளாக இருந்த காலத்தில் மட்டுமே சூர்யா இதுபோன்ற முகத்தை தேவராஜிடம் பார்த்திருந்தான்.
அர்ஜுனிடம் சூர்யா காட்டும் கருணை, அவன் சுப்புலட்சுமியைத் திருமணம் செய்திருப்பதால்தான் என்று தேவராஜ் கருதுகிறார். எனவே, கலெக்டரிடம் சூர்யா ஏன் இவ்வளவு மென்மையாக நடந்துகொள்கிறான் என்று அவர் கேள்வி எழுப்புகிறார். தனது நட்பின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதற்காக சூர்யா தேவராஜிடம் கோபமாகக் கத்தும்போது, தேவராஜ் உயிரற்ற பார்வையுடன் அவனை நோக்கிப் பார்க்கிறார்.
இந்தக் காட்சியில் ரஜினிகாந்துக்கு வெடிக்கும் தன்மையுள்ள வசனங்களும், தனது நடிப்பை உரக்க வெளிப்படுத்துவதற்கான இடமும் கிடைக்கிறது. ஆனால், மம்மூட்டி தனது அதிகாரம் மிக்க, ஈர்க்கக்கூடிய பார்வையாலும், சில சுருக்கமான வசனங்களாலும் அதற்கு இணையாகப் போட்டியிடுகிறார்.
அமைதியான அதிகார வெளிப்பாடு: ‘முடியாது’ தருணம்
காகிதத்தில் பார்க்கும்போது தேவராஜ் வலிமையானவர், அதிகாரம் மிக்கவர், தாக்கம் கொண்டவர். ஆனால், சூர்யாவைப் போல அதிகமான திரை வசீகரமோ, கம்பீரமான பாணியோ அவரிடம் இல்லை. இருந்தாலும், அது திரையில் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் மம்மூட்டியின் பங்களிப்பு தான் என்று சொல்லலாம்.
அவரது நடிப்பின் சிறப்பு என்னவென்றால், அவர் தேவராஜ் கேரக்டரை ஒரே மாதிரியான தன்மைக்குள் சுருக்கிவிடவில்லை. கேரக்டரின் பல்வேறு பரிமாணங்களையும் ஆழமாக ஆராய்கிறார். அதனால்தான் ‘தளபதி’ திரைப்படம் சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக மட்டுமல்லாமல், தேவராஜாக மம்மூட்டியின் நடிப்புக்காகவும் நினைவுகூரப்படுகிறது. தேவராஜின் நடிப்பின் ஆழத்தையும் கூர்மையையும் புரிந்துகொள்வதற்கான சிறந்த உதாரணம், கலெக்டர் அர்ஜுனுடன் நடைபெறும் கூட்டக் காட்சியாகும்.
தேவராஜ் மற்றும் சூர்யா தங்களது ரவுடித்தன நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடுவதற்காக அர்ஜுன் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். அப்போது தேவராஜ் மிக எளிமையாக, “முடியாது” என்று கூறுகிறார். ஆனால் அந்த ஒரு வார்த்தையும், அதைச் சொல்லும் விதமும் அங்கிருந்த அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி, தனது அதிகாரத்தை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நிலைநிறுத்துகிறது.
தேவராஜ் மற்றும் துரியோதனன்: சாம்பல் நிறத்தை மறுபரிசீலனை செய்தல்
இந்துப் புராண இதிகாசமான மகாபாரதத்தில் கர்ணனின் கதையை, குறிப்பாக துரியோதனனுடனான அவரது நட்பை மையமாகக் கொண்டு மறுபரிசீலனை செய்யும் திரைப்படம் ‘தளபதி’. ஒருவரை வில்லனாகக் கருதுவது என்பது முழுமையான உண்மை அல்ல; ஒருவரைப் பற்றியோ, ஒரு சூழ்நிலையைப் பற்றியோ, ஒரு செயல்பாட்டைப் பற்றியோ நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதையே அது சார்ந்திருக்கிறது என்று திரைப்படம் வலியுறுத்துகிறது.
சூர்யாவின் (கர்ணன்) பார்வையில், அவரது தாயான கல்யாணி (குந்தி), ஸ்ரீவித்யா நடித்த கேரக்டர்) அவரை பிறந்தவுடனேயே கைவிட்டதற்காகத் தவறு செய்தவர். ஆனால் கல்யாணியின் பார்வையில், அவர் அப்போது சிறுமியாக இருந்ததால் வேறு வழியின்றியே அந்த முடிவை எடுத்திருந்தார். சூர்யாவும் தேவராஜும் (துரியோதனன்), சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், தாங்கள் மக்களுக்காகவே செயல்படுகிறோம் என்று நம்புகிறார்கள்.
இதற்கு மாறாக, அர்ஜுன் (அர்ஜுனன்) அவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கிறார். செல்வச் செழிப்பில் பிறந்த அர்ஜுனுக்கு, சமூகத்தில் சலுகைகள் இல்லாமல் வாழும் மக்களின் இயலாமையும், அவர்களின் துயரங்களை அரசு அமைப்பு புறக்கணிப்பதும் புரியவில்லை என்று சூர்யாவும் தேவராஜும் கருதுகிறார்கள். ஆனால், நேர்மையான அதிகாரியாக இருக்கும் அர்ஜுனின் பார்வையில், குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் குற்றவாளியே.
சூர்யாவைக் காதலித்த போதிலும், சுப்புலட்சுமி (திரௌபதி) இறுதியில் அர்ஜுனைத் திருமணம் செய்துகொள்கிறார். இதற்கு அர்ஜுனின் சமூக அந்தஸ்தும், தான் ஒரு அனாதையாகவும் சட்டத்துக்கு வெளியே செயல்படுபவனாகவும் இருப்பதுமே காரணம் என்று சூர்யா கருதுகிறார். ஆனால், தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராகச் செல்லும் அதிகாரம் சுப்புலட்சுமியிடம் இல்லை.
திரைப்படம் வலியுறுத்தும் இந்த சார்பியல் கண்ணோட்டத்தின் காரணமாக, கேரக்டர்களின் நடிப்பு பல அடுக்குகளையும் பல பரிமாணங்களையும் கொண்டதாக இருக்க வேண்டியிருந்தது. இங்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு அரசனைப் போல சித்தரிக்கப்படும் தேவராஜ்/துரியோதனனாக மம்மூட்டி வழங்கிய நடிப்பு, ‘தளபதி’யின் கதை அமைப்பில் உள்ள நுணுக்கங்களுடன் மிகவும் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
சொல்லப்படாதவற்றின் அழகு
மம்மூட்டி தனது உடல் அசைவுகள் மற்றும் முகபாவனைகள் மூலம் தேவராஜ் கேரக்டருக்கு நுணுக்கமாகவும் அற்புதமாகவும் கூடுதல் ஆழத்தையும் விவரங்களையும் சேர்க்கும் பல காட்சிகள் திரைப்படத்தில் உள்ளன. உதாரணமாக, சூர்யாவால் சமீபத்தில் கொல்லப்பட்ட ரமணா என்ற நபரின் பிறந்த குழந்தை மகளை தேவராஜ், சூர்யாவுக்கு அறிமுகப்படுத்தும் காட்சியை எடுத்துக்கொள்ளலாம்.
அந்தக் குழந்தை யார் என்பதை அறிந்ததும் சூர்யா அதிர்ச்சியிலும் குற்ற உணர்விலும் உறைந்து நிற்கிறான். குழந்தையின் தாயான பத்மாவை (பானுப்ரியா) குற்ற உணர்வுடன் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது தேவராஜ் அந்தக் குழந்தையிடம், சூர்யாவிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும், அவன் எப்போதும் அவளுக்காக இருப்பான் என்றும் கூறுகிறார்.
குழந்தை அழத் தொடங்கியதும், தேவராஜ் அவளை சூர்யாவின் கைகளிலிருந்து மீண்டும் எடுத்துக்கொண்டு பத்மாவை நோக்கிச் செல்கிறார். பின்னர் சூர்யாவின் முகபாவனையைப் புரிந்துகொள்ளும் விதமாக, அவனை நுட்பமாகத் திரும்பிப் பார்க்கிறார். அந்த ஒரு பார்வை, சூர்யாவிடம் தேவராஜ் கொண்டிருக்கும் அன்பையும் கருணையையும் மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர் வைத்திருக்கும் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதே நேரத்தில், அனைவருடைய விதியையும் தீர்மானிக்கும் உண்மையான அதிகார மையம் தேவராஜ்தான் என்பதையும் அந்தப் பார்வை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், இத்தகைய நுணுக்கமான நடிப்பில் மட்டுமே மம்மூட்டி சிறந்து விளங்குவதில்லை. வெளிப்படையான உணர்ச்சிக் காட்சிகளையும் அவர் மிகச் சிறப்பாகச் செய்கிறார்.
சூர்யா எதிரணியில் சேருவதற்காக வழங்கப்பட்ட பெரும் வாய்ப்பை நிராகரித்துவிட்டான் என்பதை அறிந்த பிறகு, அவனைச் சந்திக்க அவனது வீட்டிற்கு தேவராஜ் வரும் காட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அப்போது, அன்பான அரவணைப்பின் வெப்பத்தை முதன்முறையாக உணர்ந்த கைவிடப்பட்ட சிறுவனைப் போல தேவராஜின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அதேபோல், சுப்புலட்சுமியை சூர்யாவுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு சாருஹாசன் கேரக்டரிடம் கோபத்துடனும் வேதனையுடனும் கெஞ்சும் காட்சியும் குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/09/08/mammootty-rajinikanth-thalapathi-performance-devaraj-surya-mani-ratnam-3-2026-09-08-18-29-56.webp)
மேலும், அர்ஜுன் தனது சகோதரன் என்றும், கல்யாணி அவர்களின் தாய் என்றும் சூர்யா கூறிய பின்னரும் சூர்யா தன் பக்கத்திலேயே நிற்கத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்பதை இறுதியில் தேவராஜ் உணரும்போது, அவரது கண்களில் கண்ணீர் பெருகும் காட்சியும் மிகச் சிறப்பானது. இத்தகைய ஒவ்வொரு தருணத்திலும் மம்மூட்டி, தேவராஜ் கதாபாத்திரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆழத்தை மிகத் திறமையாக வழங்குகிறார்.
மம்மூட்டி – ரஜினிகாந்த் கெமிஸ்ட்ரி
மம்மூட்டிக்கும் ரஜினிகாந்துக்கும் இடையிலான அற்புதமான திரை கெமிஸ்ட்ரி ‘தளபதி’ திரைப்படத்தின் சிறப்புக்கு முக்கிய காரணமாகிறது. குறிப்பாக, கலெக்டரின் இல்லத்தில் நடைபெறும் சந்திப்புக் காட்சியில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அங்கு இருவரும் வார்த்தைகளைக் காட்டிலும் அமைதியிலும், சொல்லப்படாத அர்த்தங்களின் மூலமாகவும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்கிறார்கள். அவர்கள் ஒரே உடலும் ஒரே ஆன்மாவும் கொண்டவர்கள் போலத் தோன்றுகிறார்கள்.
மேலும், இசைமேதை இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற “காட்டுக்குயிலு” பாடலில் இருவரும் இரண்டு அழகான சிறுவர்களைப் போல ஒன்றாக நடனமாடியதை யாரால் மறக்க முடியும்? மணிரத்னம் ‘தளபதி’ திரைப்படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். அவரது முந்தைய பல திரைக்கதைகளில் காணப்படாத ஒரு அம்சம் இது.
அதிலும் குறிப்பாக, சூர்யாவுக்கே தனித்துவமான கதாபாத்திர வளர்ச்சி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தேவராஜின் கதாபாத்திரப் பயணத்தை வடிவமைத்த விதம் கூடுதல் பாராட்டுக்குரியது. முதன்முறையாக தேவராஜை நாம் பார்க்கும்போது, அவர் இரக்கமற்றவராகவும், மக்கள் தன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவராகவும் இருக்கிறார். ஆனால், திரைப்படத்தின் இறுதியில், சூர்யாவுடன் நட்பு கொண்ட பிறகு தான் கனவு கண்ட மனிதநேயமிக்க மனிதராக அவர் மாறுகிறார்.
அர்ஜுன் தனது சகோதரன் என்றும், கல்யாணி அவர்களின் தாய் என்றும் சூர்யா ஒப்புக்கொள்ளும் போது, தேவராஜின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. தனது குடும்பத்தையும் தன்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அவர் சூர்யாவிடம் கெஞ்சுகிறார். அந்தத் தருணம் வரை தேவராஜ் எவ்வளவு தனிமையில் வாழ்ந்திருக்கிறார் என்பதை இந்தக் காட்சி ஆழமாக உணர்த்துகிறது.
75 வயதிலும் தொடரும் மம்மூட்டியின் அசாதாரண நடிப்பு
75 வயதிலும் மம்மூட்டி தனது அசாதாரணமான நடிப்புகளால் நம்மை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்திய உதாரணமாக, ‘பிரம்மயுகம்’ (2024) திரைப்படத்தில் அவர் தேசிய விருது பெற்ற நடிப்பைக் குறிப்பிடலாம். ஆனால், மம்மூட்டியின் இந்த அசாதாரண நடிப்புத் திறன் இன்றோ அல்லது சமீப காலத்திலோ தொடங்கியதல்ல என்பதை மறுக்க முடியாது. 35 ஆண்டுகளைக் கடந்த ‘தளபதி’ திரைப்படத்தில் அவர் திரையைத் தனது வசப்படுத்தியதுபோலவே, பல முறை நமது இதயங்களையும் தனது நடிப்பால் வென்றிருக்கிறார்.
