இந்நிலையில் சட்டமன்றத்தில் விதிகளை மீறிப் பேசியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் முறைப்படி அவை உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இது தொடர்பாக திமுகவின் துணைக் கொறடா கோவி. செழியன், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் இந்த உரிமை மீறல் புகாரை நேரில் அளித்தார். அதில், “அவையின் விதிகளை மீறிப் பேசிய முதலமைச்சர் விஜய்யின் கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளைச் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று (08.09.2026) அவை கூடியதும் எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சட்ட ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய்யின் பதிலுரை குறித்து விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “பொதுவாக வெளியில் இருப்பவர்கள் பெயர்களை அவையில் பேசக்கூடாது என்ற விதி இருக்கிறது. அந்த கமிஷன் முடிகிற போது, 26 குற்றச்சாட்டுகளும் எந்த விதத்திலும் நிரூபிக்கப்படவில்லை, அதனால் வழக்குத் தொடர முடியாது என்று குறிப்பிடப்பட்டது. எனவே முதல்வர் பேசிய காவல்துறை தவிர ஆதாரமில்லாமலும், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிற அத்தனை குறிப்புகளும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதே சமயம் முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டுப் பேச்சுக்கு அவையிலேயே திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துச் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்ட சூழலில், தற்போது இந்த விவகாரம் உரிமை மீறல் புகாராக மாறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
