முதலில் அண்ணன்… 3 மணி நேரத்தில் தம்பி! அடுத்தடுத்து மாரடைப்பால் பறிபோன இரு உயிர்கள்…

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் காசர்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 70 வயதான அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரை இழந்த வேதனையில் இருந்த தம்பிக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பட் (70). அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சகோதரர் கேசவ பட் உட்பட உறவினர்கள் அவரது உடல் அருகே திரண்டிருந்தனர்.

அண்ணனின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கேசவ பட் அழுதுகொண்டிருந்த நிலையில், இரவு சுமார் 10 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டிலேயே அவர் மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதிலும் கேசவ பட் உயிரிழந்தார். அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்ணன் ராமகிருஷ்ண பட் உயிரிழந்த சுமார் மூன்று மணி நேரத்துக்குள் தம்பி கேசவ பட் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மணி நேர இடைவெளியில் இரு சகோதரர்களையும் இழந்த குடும்பத்தினரின் துயரம் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: ஹோட்டல் ஸ்டைல் குழம்பு வீட்டிலேயே செய்யணுமா? இந்த சமையல் நுணுக்கங்களை ட்ரை பண்ணிப் பாருங்க!

Source link