அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது விமான நிலையப் பிரிவில் 5.54 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது அந்நிறுவனம் தனது வணிகத்திற்கு நிதி திரட்ட உதவும். இந்த பங்கு விற்பனையின் மூலம் டெமாசெக், பிளாக்ராக், பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் ஆல்ஃபா வேவ் உள்ளிட்ட முதலீட்டாளர் குழுவிடமிருந்து சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ. 9,825 கோடி) திரட்டப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் முதலீட்டாளர் குழுவிற்கு புதிய பங்குகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது வணிகத்திற்கு புதிய மூலதனத்தை வழங்கும். இருப்பினும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸின் கட்டுப்பாட்டுப் பங்குதாரராகத் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ. 1.71 லட்சம் கோடி!
இந்த ஒப்பந்தத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, இந்த விமான நிலைய நிறுவனத்தின் மதிப்பு சுமார் 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) ஆகும். ஒவ்வொரு தவணையின் அளவு அல்லது வழங்கப்படும் பங்குகளின் விலை ஆகியவற்றை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
இந்த நிதி, நிறுவனத்தின் விமான நிலைய வலையமைப்பை விரிவுபடுத்தவும் நவீனமயமாக்கவும், விமான நிலையம் தொடர்பான வணிக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தரைவழி கையாளுதல் மற்றும் பயணிகள் சேவைகள் போன்ற தொடர்புடைய வணிகங்களை வளர்க்கவும் பயன்படுத்தப்படும்.
மிகப்பெரிய விமான நிலைய உள்கட்டமைப்பு நிறுவனம்!
இந்த முதலீட்டாளர் குழுவில் டெமாசெக்கின் ஜோங்சோங் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஆல்ஃபா வேவ் III, பிரேம்ஜி இன்வெஸ்ட்டின் PI ஆப்பர்சூனிட்டிஸ் நிதிகள், மற்றும் பிளாக்ராக்கின் குளோபல் அலோகேஷன், ஸ்ட்ராடஜிக் இன்கம் மற்றும் ஃபிக்ஸட்-இன்கம் உத்திகளின் கீழ் நிர்வகிக்கப்படும் நிதிகள் உள்ளிட்ட பல முக்கியப் பெயர்கள் அடங்கியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய உள்கட்டமைப்பு நிறுவனமான அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட எட்டு விமான நிலையங்களை நிர்வகிக்கிறது. இந்த விமான நிலையங்கள் நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் சுமார் 25 சதவீதம் மற்றும் விமான சரக்கு அளவில் 33 சதவீதம் அளவுக்கு கையாளுகின்றன.
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத பிரிவின் இயக்குநர் ஜீத் அதானி கூறுகையில், “இந்தக் கூட்டாண்மை அதானி ஏர்போர்ட்ஸ் தளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், இந்தப் பயணத்தில் எங்களது பங்காளிகளாகப் புகழ்பெற்ற நீண்ட கால முதலீட்டாளர்களைப் பெற்றிருப்பது பெருமைக்குரியது” என்றார்.
“இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியின் மிக சக்திவாய்ந்த பெருக்கிகளில் ஒன்றாகும். வான்வழி இணைப்பில் ஏற்படும் ஒவ்வொரு விரிவாக்கமும், விமான நிலைய வாயிலையும் தாண்டி வர்த்தகம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியைத் தூண்டுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த முதலீட்டாளர்களின் ஆதரவுடன், அந்த வளர்ச்சிக்கு முன்னதாகவே நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம். உலகளவில் முன்னணி ஒருங்கிணைந்த விமான நிலையத் தளங்களில் ஒன்றாக மாற்றுவதற்காக எங்களது உள்கட்டமைப்பு, நகரப் பகுதி மேம்பாடுகள் மற்றும் விமானம் அல்லாத வணிகங்களை நாங்கள் விரிவுபடுத்துவோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
