இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ( IPPB ) சமீபத்தில் தனது 9வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய டிஜிட்டல் சேவைகளைத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு, முதலீடு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் வங்கி மற்றும் கட்டணச் சேவைகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாக இந்தப் புதிய தளங்கள் விளங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் காப்பீட்டிற்கான டிஜிட்டல் தளங்களை இவ்வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் முதலீடுகள் எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தனது டிஜிட்டல் காப்பீட்டுத் தொழில்நுட்பத் தளத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஆயுள், உடல்நலம் மற்றும் பொதுக் காப்பீடு ஆகிய விருப்பங்களை வழங்குவதன் மூலம் காப்பீட்டுத் தீர்வுகளை எளிமைப்படுத்த உதவும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு எளிமையான, உடனடியாகக் கிடைக்கக்கூடிய மற்றும் தடையற்ற டிஜிட்டல் முதலீட்டு அனுபவத்தை வழங்கும் நோக்கில் டிஜிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் தளத்தையும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, யூடிஐ மியூச்சுவல் ஃபண்டின் (UTI Mutual Fund) குறிப்பிட்ட திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தால் (NISM) சான்றிதழ் பெற்று, பணியாளர் தனித்துவ அடையாள எண்ணைக் (EUIN) கொண்டுள்ள ஊழியர்களால் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன. தபால் துறை 2001ஆம் ஆண்டு முதல் தபால் நிலையங்கள் மூலம் காப்பீடு மற்றும் பணப் பரிமாற்றம் போன்ற பிற நிதிச் சேவைகளுடன் சில மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 9ஆவது நிறுவன தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வணிகர்களின் டிஜிட்டல் கட்டண ஏற்பாட்டை எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘தாக்பே சவுண்ட் பாக்ஸ்’ (DakPay Sound Box) அறிமுகத்தையும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அறிவித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மக்களுக்கு வங்கிச் சேவைகள், டிஜிட்டல் மேபெண்டுகள், அரசு வழங்கும் நன்மைகள் மற்றும் பிற முக்கிய நிதிச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஒரு முக்கிய தளமாக வளர்ந்துள்ளது.
2026 மார்ச் 31 நிலவரப்படி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் இந்தியா அளவிலான வாடிக்கையாளர் அடிப்படை 13.25 கோடியை எட்டியுள்ளது. இதில் 77 சதவீதம் கிராமப்புறங்களிலும், 49 சதவீதம் பெண் வாடிக்கையாளர்களும் உள்ளனர். அவர்கள் மார்ச் 31 நிலவரப்படி ரூ. 29,104 கோடி வைப்புத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி UPI பணப்பரிமாற்றங்களில் ரூ. 7.41 லட்சம் கோடி உட்பட மொத்தம் 21.61 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது.
2026 மார்ச் 31 நிலவரப்படி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியானது தோராயமாக ரூ. 1.55 லட்சம் கோடி பலன்களைப் பெறும் 6.5 கோடி நேரடிப் பயனாளிப் பரிமாற்றப் (DBT) பயனாளிகளையும், ரூ. 36,140 கோடி விநியோகத்துடன் 12.06 கோடி AePS பரிவர்த்தனைகளையும் தெரிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு 29.43 லட்சம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி விநியோகித்துள்ளது. மேலும் 9.47 கோடி மொபைல் எண்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன மற்றும் 1.35 கோடி குழந்தைகளுக்கான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புற மற்றும் பின்தங்கிய சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், கடந்த நிதியாண்டில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூன்று புதிய சேமிப்புக் கணக்கு வகைகளுடன் தனது சேமிப்புக் கணக்கு வழங்கல்களை விரிவுபடுத்தியுள்ளது.
SHG சேமிப்புக் கணக்கு: சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புற சிறு தொழில்முனைவோருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் பாதுகாப்பான வங்கித் தீர்வு ஆகும்.
சுரக்ஷித் சேமிப்புக் கணக்கு: பிரீமியம் சேமிப்புக் கணக்கின் வழக்கமான நன்மைகளுடன் பிஷிங், ஸ்பூஃபிங் மற்றும் சிம் ஜாகிங் போன்றவற்றுக்கு எதிராக ரூ. 25,000 சைபர் காப்பீட்டுடன் கூடிய மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
சம்பூர்ண சேமிப்புக் கணக்கு: பிரீமியம் சேமிப்புக் கணக்கின் வழக்கமான நன்மைகளுடன் ஆரோக்கிய நல்வாழ்வு மற்றும் சுரக்ஷித் சைபர் பாதுகாப்பை இணைத்து நிதிப் பாதுகாப்பு, தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் மேம்பட்ட பலன்களை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில், இது இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் கிடைக்கும் நிதிச் சேவைகளின் வரம்பை வங்கி மற்றும் கட்டணங்களைத் தாண்டி விரிவுபடுத்துகிறது. டிஜிட்டல் சேனல்கள் மூலம் முதலீடு மற்றும் காப்பீட்டுப் பொருட்களுக்கான அணுகலை இது அவர்களுக்கு அதிகளவில் வழங்குகிறது. அடிப்படை வங்கிச் சேவைகளுக்கான அணுகலைத் தாண்டி, நீண்ட கால சேமிப்பு, முதலீடு மற்றும் நிதிப் பாதுகாப்பை ஆதரிக்கக்கூடிய தயாரிப்புகளுக்கான அணுகலை நோக்கி நிதிச் சேர்க்கை வளர்ச்சியடைந்து வருவது இதன் பரந்த முக்கியத்துவமாகும்.
வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மியூச்சுவல் ஃபண்ட் தளம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளையும், டிஜிட்டல் காப்பீட்டுத் தொழில்நுட்பத் தளம் மூலம் காப்பீட்டுத் தேர்வுகளையும் ஆராயலாம். தபால் துறையின் கீழ் 2018ஆம் ஆண்டின் செப்டம்பர் 1ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் பங்குகளுக்கு இந்திய அரசு 100% உரிமையாளராக உள்ளது. கிராமப்புறங்களில் சுமார் 1,40,000 உட்பட சுமார் 1,65,000 தபால் நிலையங்களைக் கொண்ட தபால் வலையமைப்பு மற்றும் சுமார் 3,00,000 தபால் ஊழியர்களைப் பயன்படுத்தி சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
