தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே அஜித்… அந்துமணி பதில்கள்!

செ.காமாட்சி, திருப்பூர்:

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே, நடிகர் அஜித்?

நடிகர், ஒரு கார் ரேஸ் பிரியர். பல நாடுகளுக்கு சென்று, அங்கு நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று, பல பரிசுகளையும் பெறுபவர். நமது அரசு, ‘உலக தரத்தில் கார் ரேஸ் மைதானம் அமைக்கப்படும்…’ என அறிவித்ததால், அஜித் நன்றி கூறியுள்ளார்!

கி.பாலு, கமுதி:

நீண்ட நேரம் சபையை நடத்தி, தமிழக சட்டசபை சாதனை படைத்துள்ளதே?

சாதனை செய்வது பெரிதல்ல. தேவையற்ற விஷயங்களைப் பேசி, சபையின், எம்.எல்.ஏ.,க்களின் நேரத்தை வீணடிக்காமல், நல்லாட்சி நடக்க வேண்டும் என்பது தான், மக்களின் விருப்பம்!

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி:

‘சட்டம் – ஒழுங்கு நன்றாக உள்ளது…’ என, முதல்வர் விஜய், சான்று வழங்கி இருக்கிறாரே?

‘சட்டம் – ஒழுங்கு சீர்குலையவில்லை. தனிப்பட்ட குற்ற சம்பவங்களை வைத்து, எந்த முடிவுக்கும் வரக் கூடாது…’ என கூறியுள்ளார். சமுதாயக் காவல் என்ற முறையில், பொதுமக்களும், காவல்துறையுடன் கைகோர்த்து, சட்டம் – ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்!

கே.ராமநாதன், மதுரை:

தி.மு.க., ஆட்சியில் விஞ்ஞான ரீதியாக நடந்த ஊழல்கள் பற்றி, முதல்வர் விஜய் வெளியிட்ட பட்டியல், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆராய்ச்சி செய்ய உகந்த தலைப்பு கொடுக்கும் அளவுக்கு உள்ளதே?

பல மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும், ஊழல் பட்டியல் இது. அப்படி செய்தால், இன்னும் எவ்வளவு புதிய பூதங்கள் கிளம்புமோ, கருணாநிதிக்கே வெளிச்சம்!

ராகுல், திருப்பூர்:

தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் உதயநிதியின் மகன் இன்பநிதியும், அரசியல் பிரவேசத்திற்கு முன்னோடியாக சட்டசபைக்கு வந்தது குறித்து?

இன்பநிதி, அவரது தந்தை உதயநிதியை பார்த்தாவது துண்டு சீட்டோ, பக்கம் பக்கமாக எழுதி வைத்து பேசுவது தவறு என்று உணர்ந்து, அவரது கொள்ளு தாத்தா கருணாநிதியைப் போல், அருமையான தமிழில், சரளமாக பேச கற்றுக் கொண்டு அரசியலுக்கு வரட்டும்!

ஆர்.ஹரி கோபி, புதுடில்லி:

டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாட விடாதீர்கள். அத்தகைய அரசியல்வாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு, மஹாராஷ்டிரா மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பற்றி?

மருத்துவர்களின் சேவை மகத்தானது. அவர்கள், உயிர் காக்கும் பணி செய்பவர்கள். அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் போவது வேதனையே. சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரியானதே!

ஒய்.எல்.ஸ்ரீ ரவி ராகுல், ஈரோடு:

டைசன் எனும் அமெரிக்க நிறுவனம், கேமராவுடன் கூடிய, ஏ.ஐ., டூத் பிரஷ் உருவாக்கியுள்ளதாமே. பற்களின் கறையை கண்டுபிடித்து, பிரத்யேக ஜெல் கொண்டு, துல்லியமாக சுத்தம் செய்யுமாம். ஒரு பல் மருத்துவர் போல் செயல்படும், இதன் ஆரம்ப விலை, 47 ஆயிரம் ரூபாயாம்?

நம்மூரில் இன்னும் பலர் வேப்பங்குச்சியும், சாம்பலையும் உபயோகப்படுத்தி பற்களை ஆரோக்கியமாக வைத்துள்ளனரே… டைசன் நிறுவனத்திற்கு தெரிந்தால், அதையும் விற்பனைக்கு கொண்டு வந்து விடுவர்!

கண்மணி, ஈரோடு:

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா, என்.டி.ஆர்., வரிசையில், முதல்வர் விஜய் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளாரே?

சினிமாவிலிருந்து, அரசியலுக்கு வந்தவர்கள் என்ற வகையில், அப்படி கூறியிருப்பார் கண்மணி. வேறு எந்த எண்ணத்திலும் இருக்காது; அவ்வளவு அவசர படமாட்டார் விஜய்!

நெல்லை குரலோன், தென்காசி:

‘தி.மு.க.,வுடன் உறவு அறுந்து விட்டது என்ற பேச்சுக்கே, அரசியலில் இடமில்லை; அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்ப, நிலைப்பாட்டை மாற்றுவது வழக்கம் தான்…’ என்று, ‘பல்டி’ அடித்திருக்கிறாரே, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ?

அவரது பாணி அரசியலுக்கு, தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் வைகோ!

Source link