“வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது”

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஐ.சி.யூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த அறிக்கை (மாலை 05.15 மணியளவில்) அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “சுவாசப் பிரச்சனை காரணமாகச் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மேலும், அவர் தொடர்ந்து தேவையான மருத்துவ ஆதரவுடன் குணமடைந்து வருகிறார். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும், மருத்துவ மேற்பார்வையிலும் இருந்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வி.எஸ்.பாபுவை, அமைச்சர் மரிய வில்சன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வி.எஸ்.பாபு நலமுடன் இருக்கிறார். முதலமைச்சர் விஜய் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link