ஒரு திரைப்படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் ஒவ்வொரு இயக்குநரும் இறுதியில் கற்றுக்கொள்ளும் ஒரு சொல்லப்படாத விதி இருக்கிறது: முதல் படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களுக்குத் தெரியாததால், அந்தப் படத்தில் இருக்கும் சிறு குறைகளை அவர்கள் மன்னித்துவிடுவார்கள். ஆனால் அதே படத்தில் 2-ம் பாகத்தில் சிறு சிறு தவறுகள் நிகழும்போது அவ்வளவு எளிதாக மன்னிக்கப்படுவதில்லை.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
2022-ல் வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தில் சில ஏற்றத்தாழ்வுகளும், சீரற்ற சி.ஜி.ஐ காட்சிகளும் இருந்தன. ஆனால் படத்தின் வேகம், சுவாரஸ்யம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை அந்தக் குறைகளைப் பெரிதாக உணர விடவில்லை. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ‘சர்தார் 2’ படத்திற்கு அந்தச் சலுகை கிடையாது. முதல் படம் கொடுத்த வாக்குறுதிகளுடன், அதைவிட அதிகமான எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்துள்ளனர்.
179 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் முதல் பாகத்தைவிட இருமடங்கு குறைகளும், அதில் இருந்த இனிமையான ஆச்சரியங்கள் எதுவும் இல்லாத படமாக இது அமைந்துள்ளது. சி.ஜி.ஐ காட்சிகள் இன்னும் சரியாக அமையவில்லை. ஆனால் இம்முறை அவை மிகப்பெரிய மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளிலேயே தென்படுகின்றன. சமூகக் கருத்தும் இன்னும் ஒரு விரிவுரையைப் போலவே சொல்லப்படுகிறது; ஆனால் இப்போது அது இன்னும் நீளமாகியுள்ளது. எல்லாமே பெரிதாகியிருக்கிறது; ஆனால் எதுவுமே சிறப்பாகவில்லை. இதுதான் ‘சர்தார் 2’ படத்தின் மிகப்பெரிய பிரச்சினை.
கதை
முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே ‘சர்தார் 2’ தொடங்குகிறது. கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கதாபாத்திரம் மூத்த ரா (RAW) உளவாளியான ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ். மற்றொன்று அவரது மகனான ஏஜென்ட் விஜய் பிரகாஷ். காவல் ஆய்வாளராக இருந்த விஜய் பிரகாஷ் தற்போது ரா ஏஜென்ட்டாக உள்ளார். அதே நேரத்தில், தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தின் நிழலில் இருந்து இன்னும் அவரால் முழுமையாக வெளிவர முடியவில்லை.
ஏஜென்ட் சர்தாரின் முந்தைய பணி ஒன்று மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில், அதே சம்பவம் தற்போது புதிய உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுக்கிறது. இதனால் சர்தார் மீண்டும் களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுவரை அவர் மேற்கொண்டதிலேயே மிகவும் ஆபத்தான பணி எனக் கூறப்படும் ஒரு புதிய பணிக்குள் அவர் இழுக்கப்படுகிறார்.
கார்த்தி – படத்தின் மிகப்பெரிய பலம்
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம், ஒருவேளை ஒரே பலம் என்றுகூட சொல்லலாம், கார்த்திதான். இரண்டு கதாபாத்திரங்களிலும் அவர் முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். அவரது நடிப்பில் இருக்கும் தீவிரம் திரையில் தெளிவாகத் தெரிகிறது. மூத்த உளவாளியான சர்தார் கதாபாத்திரத்தில் அவர் அமைதியான அதிகாரத்தையும், உடல்மொழியில் ஒரு கனத்த தன்மையையும் வெளிப்படுத்துகிறார். இதனால் படத்தின் தீவிரமான காட்சிகளுக்கு அவர் வலுவான அடித்தளமாக இருக்கிறார்.
அதே நேரத்தில் விஜய் பிரகாஷ் கதாபாத்திரத்தில் கார்த்தி சற்று இயல்பாகவும், உணர்ச்சிவசப்பட்டவராகவும், பலவீனமான தருணங்களை வெளிப்படுத்தக்கூடியவராகவும் நடித்துள்ளார். முதல் பாகத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக இருந்த சர்தார் – விஜய் பிரகாஷ் தந்தை-மகன் உறவு, இந்தப் படத்திலும் வலுவான அம்சமாகத் தொடர்கிறது. படம் வேகத்தைக் குறைத்து இந்த இரு கதாபாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் தருணங்களை உருவாக்கும்போது, அது சிறப்பாகச் செயல்படுகிறது.
எஸ்.ஜே. சூர்யா
முக்கிய வில்லனாக எஸ்.ஜே. சூர்யா முதல் 30 நிமிடங்களில் அவரது வருகை படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கிறது. ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய கட்டுப்பாடற்ற ஆற்றலும், நாடகத்தனமான அச்சுறுத்தலும் இங்கும் காணப்படுகிறது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதால், 179 நிமிடங்கள் நீளமான படத்தை முழுவதும் தாங்கும் அளவுக்கு அவரது நடிப்பு பயணிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில், அவர் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளுக்கான காரணங்கள் மேலோட்டமாகவே இருப்பதால், எஸ்.ஜே. சூர்யாவுக்குக்கூட செய்ய எதுவும் இல்லாத நிலை உருவாகிறது.
மாளவிகா மோகனன்
கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள மாளவிகா மோகனன், தனக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படாத ஒரு கதாபாத்திரத்தில் இருந்தபோதிலும் கவனத்தை ஈர்க்கிறார். அவரது திரை இருப்பு வலுவாக உள்ளது. அதேபோல், சண்டைக் காட்சிகளையும் நம்பிக்கையுடன் கையாண்டுள்ளார். ஆனால் கதாபாத்திரத்திற்கென தனிப்பட்ட பயணம் அல்லது வளர்ச்சியை உருவாக்காமல், கதையை நகர்த்துவதற்கான ஒரு கருவியாகவே திரைக்கதை அவரைப் பயன்படுத்துகிறது.
அஷிகா ரங்கநாத் மற்றும் முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரத்தை மீண்டும் ஏற்றுள்ள ரஜிஷா விஜயன் ஆகியோருக்கும் போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. குறிப்பாக முதல் பாகத்தில் சிறப்பாக செயல்பட்ட ரஜிஷா விஜயனின் கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிகமான திரை நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆக்ஷன் காட்சிகள்
சில ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக படத்தின் நடுப்பகுதியில் இடம்பெறும் ஒரு சேசிங் காட்சியும், மருந்து தயாரிப்பு நிலையத்திற்குள் நடைபெறும் சண்டைக் காட்சியும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், இந்தக் காட்சிகளைத் தெளிவாகவும் சிறப்பாகவும் படமாக்கியுள்ளார். தனித்தனியான காட்சிகளைப் பார்க்கும்போது படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம் போலத் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திரைக்கதைப் பகுதிகளில்தான் பிரச்சினைகள் வெளிப்படுகின்றன.
ஆண்டிபயாடிக் எதிர்ப்பு – சமூகக் கருத்து
ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான கிருமிகளின் எதிர்ப்புத் திறன் (Antibiotic Resistance) குறித்த கருத்து இடம்பெறும் தருணங்களில், படம் தகவலளிப்பதாகவும், சமகாலத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. சில நேரங்களில், உளவுத் திரைப்படத்திற்குள் ஒரு பொது விழிப்புணர்வு அறிவிப்பு இடம்பெறுவது போலவே படம் செயல்படுகிறது. அந்தக் காட்சிகள் சற்று செயற்கையாகவும், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தாலும், பெரும்பாலான வணிகத் திரைப்படங்கள் முயற்சி செய்யாத ஒரு விஷயத்தை குறைந்தபட்சம் இத்திரைப்படம் முயற்சி செய்கிறது.
நம்பகத்தன்மையற்ற திரைக்கதை
இந்தத் தொடர்ச்சிப் படத்தின் முக்கியப் பிரச்சினை, கதை நகரும் விதம் அடிக்கடி குழந்தைத்தனமாகவும் நம்ப முடியாததாகவும் இருப்பதுதான். பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பல தர்க்கரீதியற்ற திருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி திரைக்கதை கட்டாயப்படுத்துகிறது. பல கதைக் கூறுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மிகவும் வசதியான முறையில் தீர்க்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு முக்கியக் காட்சியிலும் இருக்க வேண்டிய பதற்றம் படிப்படியாக குறைந்து விடுகிறது.
ஒரு உளவுத் திரைப்படத்தில் கதாநாயகன் உண்மையில் தோல்வியடையை சந்தித்துவிடுவாரோ என்ற உணர்வை ரசிகர்களிடம் உருவாக்குவது மிகவும் அவசியம். ஆனால் ‘சர்தார் 2’ அந்த உணர்வை ஒருபோதும் உருவாக்கவில்லை. கார்த்தி ஏற்று நடித்துள்ள இரண்டு கதாபாத்திரங்களும் எப்போதும் எதிரிகளைவிட ஒரு படி முன்னதாகவே இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் சரியான முடிவையே எடுக்கின்றனர்; எப்போதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர். உண்மையான ஆபத்து என்ற உணர்வே உருவாகவில்லை. ஆபத்து இல்லாமல் ஒரு திரில்லர் திரைப்படம் எப்படி விறுவிறுப்பாக இருக்க முடியும்?
சாம் சி.எஸ். இசை
சாம் சி.எஸ்.-ன் இசையும் பின்னணி இசையும் ஏமாற்றமளிக்கின்றன. முதல் பாகமான ‘சர்தார்’ திரைப்படத்தில் ஆக்ஷன் மற்றும் உளவு காட்சிகளின் தாக்கத்தை அவரது இசை உயர்த்தியது. ஆனால் இத்திரைப்படத்தில் அவரது பணி மிகவும் வழக்கமானதாகத் தோன்றுகிறது. பல காட்சிகளில், இயக்குநர் உருவாக்க முயற்சிக்கும் பதற்றத்திற்கு இசை உதவுவதற்குப் பதிலாக அதற்கு எதிராகவே செயல்படுகிறது. நீண்ட நேரம் வசனங்கள் இல்லாமல் நகரும் காட்சிகளில் பின்னணி இசை முக்கியப் பங்காற்ற வேண்டிய திரைப்படம் இது. ஆனால் இங்கு இசை மிகவும் தட்டையாகவும், பாதுகாப்பான அணுகுமுறையுடனும், எளிதில் மறந்துவிடக்கூடியதாகவும் உள்ளது.
முதல் பாகத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருந்த வேகம், இந்தத் தொடர்ச்சிப் படத்தின் மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது. ‘சர்தார் 2’ உண்மையிலேயே வெற்றியும் தோல்வியும் கலந்த திரைப்படம். கார்த்தியின் இரட்டை வேட நடிப்பு, மாளவிகா மோகனனின் வலுவான திரை இருப்பு மற்றும் சிறப்பாக உருவாக்கப்பட்ட சில ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை படம் முழுமையாக சரிவதைத் தடுக்கின்றன. ஆனால், திரைக்கதையை சரியாக உருவாக்குவதற்கு நான்கு ஆண்டுகள் கிடைத்திருந்த நிலையில், மேலும் ரூ.100 கோடி வசூல் செய்த ஒரு வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த தரத்தை எட்டவில்லை.
