பிரிட்டன் நிறுவனங்கள் மூலம் ₹8,491 கோடி முதலீடு, 5,690 வேலைவாய்ப்புகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்க முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 8 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று (செப்டம்பர் 10) இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள், ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 வழியாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் மேலும் சுமார் 8,491 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், அதன்வழியாக தமிழகத்தைச் சேர்ந்த 5,690 பேருக்கு புதிய உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த இங்கிலாந்து பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் தமிழகத்தின் முதலிடம்
கடந்த ஜூலை 15, 2026 அன்று நடைமுறைக்கு வந்த ‘இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை’ (CETA) மிகச் சரியாகப் பயன்படுத்தியதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. ஒப்பந்தம் அமலான முதல் நாளிலேயே சென்னையிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு, சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motor Sports City) அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயலாக்கும் விதமாக, உலகின் புகழ்பெற்ற லண்டன் ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ வளாகத்திற்கு முதலமைச்சர் நேரில் செல்லவிருக்கிறார். அங்குள்ள பாரம்பரிய வடிவமைப்பு, நவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் விளையாட்டு சுற்றுலா சார்ந்த வணிக நடைமுறைகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
முதலமைச்சருடன் பயணிக்கும் உயர்மட்டக் குழு
இன்று சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில், பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, SDAT உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி (இ.ஆ.ப), தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) சி.இ.ஓ திரு. தீபக் ஜேக்கப் (இ.ஆ.ப) மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இக்குழுவினர் செப்டம்பர் 17 அன்று சென்னை திரும்புவர்.
Source link
