சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மின் தடை

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் செப்டம்பரில் தினசரி மின் தேவை, 21,000 மெகாவாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் தினமும் ஒரு மணி நேரம், முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் மின் தேவை இந்த ஆண்டு ஏப்., 28ம் தேதி, 21 ஆயிரத்து 211 மெகாவாட்டாக, இதுவரை இல்லாத அளவாக அதிகரித்தது. வழக்கமாக ஜூலையில் இருந்து வெயில் குறையும்.

ஆனால், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் வெயில் கடுமையாக தொடர்வதால், முதல் முறையாக ஜூலை 14ல் மின் தேவை, 21 ஆயிரத்து 724 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.

தொடர்ந்து தினமும் மாலையில், மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இம்மாதத்தில் 21 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.

இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின் தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இவை குறித்து, மின் வாரியத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை மைய பணியாளர்களில் சிலர் கூறுகையில், ‘சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில், இரவில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன’ என்றனர்.

இவை குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வழக்கமாக கோடைக்காலத்துடன் ஒப்பிடும் போது, செப்டம்பரில் மின் தேவை 2,500 – 3,000 மெகாவாட் குறையும்; இந்த ஆண்டு குறையவில்லை. மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை, அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர்.

சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தினமும், ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link