தெலங்கானாவில் புனிதப்படுத்தும் சடங்கு சர்ச்சை: பி.ஆர்.எஸ் ஆதரவாளர்கள்

எழுதியவர்: Nikhila Henry

தெலங்கானா காவல்துறையினர் பாரத ராஷ்டிர சமிதி (BRS) ஆதரவாளர்கள் பலருக்கு எதிராக, முன்னாள் முதலமைச்சரும் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர் ராவின் சித்திபேட்டை மாவட்டப் பண்ணை வீட்டிற்கு அருகில் மூன்று “புனிதப்படுத்தும் சடங்குகளை” செய்ததற்காக மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று அப்பகுதியில் காங்கிரஸின் தலித் தொண்டர்கள் போராட்டம் நடத்திய சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவைத் சபாநாயகர் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பின்னணியில், மாநிலத்தில் “தலித்துகளுக்கு எதிரான அவமதிப்பு மற்றும் அத்துமீறல்கள்” குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி உறுதியளித்த மறுநாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உத்தரகாண்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய கூட்டப் பகுதியில் “புனிதப்படுத்தும் சடங்கு” நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்திராத நிலையில், இந்தச் சம்பவமும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையில், பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஒரு எதிர்ப்புகாரைப் பதிவு செய்துள்ளது. அதில், தாங்கள் “புனிதப்படுத்தும் சடங்கை” ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திய படங்கள் தவறாக வழிநடத்துபவை மற்றும் ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்தச் சடங்குகள் எர்ரவல்லி மற்றும் வரதராஜ்பூர் ஆகிய இரு கிராமங்களில் நடத்தப்பட்டதாக தெலங்கானா காவல்துறை தெரியப்படுத்தியது. அங்கு காங்கிரஸின் தலித் தொண்டர்கள், சபாநாயகர் ஜி.பிரசாத் குமாரை வாய்மொழியாக அவமதித்ததாகக் கூறி, இரண்டு பி.ஆர்.எஸ் மேல்சபை உறுப்பினர்கள் (MLCக்கள்) மற்றும் கட்சியின் தலைவர் உட்பட பிற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ‘தப்பு’ முரசு கொட்டிப் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சடங்கின் ஒரு பகுதியாக, தலித் தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் நடந்து சென்ற பாதைகளில் மஞ்சள் நீரும் பாலும் தெளிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மூன்று வழக்குகளும் சித்திபேட்டை கமிஷனரேட் எல்லைக்குட்பட்ட முர்கூக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் பட்டியலின/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம்-1989, சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 196 மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை குழுக்களிடையே பகையை தூண்டுதல் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு அவமதித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை ஆகும்.

இது குறித்து கஜ்பேல் ஊரக ஆய்வாளர் டி. ரவி ராஜு கூறுகையில், “புனிதப்படுத்தும் சடங்கை” நடத்தியதற்காக உள்ளூர் பி.ஆர்.எஸ் தலைவர் மற்றும் எர்ரவல்லி முன்னாள் சர்பஞ்ச் பாலராஜு மற்றும் 10 பேர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். “எர்ரவல்லி கிராமத்தைச் சேர்ந்த எம்.சுவாமி கொடுத்த புகாரில், தான் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், தானும் மற்ற தலித் போராட்டக்காரர்களும் அவ்விடத்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே மஞ்சள் நீரைப் பயன்படுத்தி புனிதப்படுத்தும் சடங்கு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்” என்று அவர் கூறினார்.

இரண்டாவது வழக்கு எர்ரவல்லிக்கு அருகில் உள்ள வரதராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆர்.எஸ் ஆதரவாளர்களான பலமணி, அப்பள பிரவீன், ராஜு மற்றும் 6 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கின் புகார்தாரர் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஸ்ரீகாந்த் ஆவார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வரதராஜ்பூரிலும் “புனிதப்படுத்தும் சடங்கை” நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்றாவது வழக்கு வர்கல் கிராமத்தைச் சேர்ந்த பி.மோகன் அளித்த புகாரின் பேரில், பி.ஆர்.எஸ் ஆதரவாளர் பவாணி கவுட் மற்றும் 8 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. “வரதராஜ்பூர் கிராமத்திற்கும் எர்ரவல்லி பண்ணை வீட்டிற்கும் இடையே கவுட் மற்றும் பிற பி.ஆர்.எஸ் ஆதரவாளர்கள் புனிதப்படுத்தும் சடங்கை நடத்துவது தொடர்பான செய்தி அறிக்கைகளைப் பார்த்ததாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்” என்று ஆய்வாளர் கூறினார்.

பி.ஆர்.எஸ் மேல்சபை உறுப்பினர்களான தாதா மதுசூதன் (தாதா மது) மற்றும் நவீன் குமார் ரெட்டி ஆகியோர் சபாநாயகர் மற்றும் அவரது தாயாரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை இந்த சர்ச்சை தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை, காவல்துறையினர் இரண்டு மேல்சபை உறுப்பினர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தால் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமதிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் சபாநாயகர் கண்கலங்கினார். இதனையடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தங்களது ஆதரவை சபாநாயகருக்குத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, வாய்மொழி வசைபாடலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸின் தலித் தலைவர்கள் தப்பு முரசு கொட்டும் போராட்டத்தை அமைத்து, செவ்வாய்க்கிழமை கேசிஆரின் பண்ணை வீட்டை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

சித்திபேட்டை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றார். “இந்த புனிதப்படுத்தும் சடங்கு குறித்த புகார்கள் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’களாக சித்திபேட்டடைக்கு மாற்றப்படலாம்” என்று அந்த அதிகாரி கூறினார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், “சாலையில் தெளிக்கப்பட்ட மஞ்சள் உட்பட தடயவியல் ஆதாரங்களை” காவல்துறை சேகரித்துள்ளது.

Source link