கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்குக் கிடைத்த நேரடி ஆதாரங்களை ஒருங்கிணைத்து 25 பக்கங்கள் கொண்ட கடிதத்தை கேரள போலீஸ் டி.ஜி.பி ரவாடா சந்திரசேகருக்கு அனுப்பியது அமலாக்கத்துறை. அந்த கடிதத்தில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து பினராயி விஜயன் தனது மகள் வீணா மூலமாக ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அவரது மருமகன் முகமது ரியாஸ் லஞ்சப் பணத்தை வீணா விஜயன் மற்றும் நண்பர்கள் மூலம் ‘எம்பவர் இந்தியா கேப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் வழியாக துபாய்க்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், பினராயி விஜயன், அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை மாநில காவல்துறையை வலியுறுத்தியுள்ள சம்பவம், அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பினராயி விஜயனின் மருமகனும் முன்னாள் அமைச்சருமான பி.ஏ. முகமது ரியாஸ் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நானும் வீணாவும் துபாய்க்குச் சென்றுள்ளோம். கேரளாவில் இருந்து எத்தனையோ அரசியல் தலைவர்கள் துபாய்க்குச் சென்று வருகிறார்கள். அவர்களெல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்தவா அங்கே செல்கின்றனர். பலருக்கும் வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் வீணா பதிலளிக்க வேண்டுமா இல்லையா என்பது அவரது தனிப்பட்ட சுதந்திரம். இந்த நாட்டின் ஒரு குடிமகனுக்கு மெளனம் காக்க முழு உரிமை உள்ளது. அவ்வாறு மெளனம் காப்பவர்களையெல்லாம் கொள்ளைக்காரர்களாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரிப்பது எந்த விதத்திலும் சரியல்ல.

சி.எம்.ஆர்.எல் மற்றும் எக்ஸாலோஜிக் இடையே நடந்தது முற்றிலும் நேர்மையான, சட்டப்படியான ஒரு வணிகப் பரிவர்த்தனை. நிறுவனங்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, மென்பொருள் சேவை வழங்கியதற்காகவே வீணா அந்தத் தொகையைப் பெற்றார். வரிகள் மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்தையும் முறையாகச் செலுத்தி, வங்கிக் கணக்கு மூலமாகவே அந்தப் பணம் பெறப்பட்டது. எந்தச் சேவையும் வழங்காமல் பணம் வாங்கப்பட்டதாகவும், அது தொடர்பாக சி.எம்.ஆர்.எல் மேலாண் இயக்குநர் மற்றும் ஊழியர்கள் வாக்குமூலம் கொடுத்ததாகவும் பரப்பப்பட்ட செய்திகள் அப்பட்டமான பொய்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக விசாரிக்கப்பட்ட ஹன்சன் வாரிஸிடம், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் அளிக்குமாறு அமலாக்கத்துறை வற்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதற்கு அவர் மறுத்தபோது, முதல்வரின் மகளை வழக்கில் குற்றவாளியாக்குவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர்
. இது போன்ற செயல்களால் மத்திய விசாரணை அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை முற்றிலும் இழக்கப்பட்டுவிட்டது. சி.எம்.ஆர்.எல் சர்ச்சை முடிவுக்கு வரும்போதெல்லாம், அடுத்தடுத்து வெளியாகும் சினிமாக்களைப் போல திட்டமிட்டுப் புதிய குற்றச்சாட்டுகளோடு வருகிறார்கள். இந்த விவகாரத்தில் சி.பி.எம் கட்சிக்குள் எந்தவிதமான குழப்பமும் இல்லை. நாங்கள் விளக்க வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம்” என்றார்.
