“உறுதியாகத் தனிச்சட்டம் இயற்றுவோம்” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 69வது நினைவு தினம் இன்று (11.09.2026) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக சமூகநீதி அமைச்சர் இன்று பரமக்குடிக்குச் சென்று தியாகி இமானுவேல் சேகரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றப்படும் என்று சட்டசபையில் பேசியிருக்கிறேன். அந்த சட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கப்படுமோ அல்லது அது குறித்து விவாதிப்போம் என்றோ நாங்கள் சொல்லவில்லை. கடந்த அரசு முன்னாள் நீதியரசர் கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைத்தது.

அந்த ஆணையம் இரண்டு மூன்று பிரிவுகளாக அது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு பிரிவு, பாதிக்கப்பட்டவர்களை பார்த்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். மறுபக்கம் அரசியல் கட்சிகளிடம் கேட்க வேண்டும், சமூக ஆர்வலர்களிடம் பேச வேண்டும்.. அதற்காக அவகாசம் வேண்டும், கால நீட்டிப்பு வேண்டும் என்று அந்த ஆணையக் குழுவினர் கேட்டிருக்கிறார்கள். நீதியரசர் கே.என்.பாட்ஷாவின் வேண்டுகோள் அடிப்படையில் அந்த அறிக்கையை பெற்றுக் கொண்டு விரைவில் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றப்படும். அதற்கான சட்ட வரைவுகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்று கூறினார். 

Source link