திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள கண்டியப்பேரி உழவர் சந்தை, ஒரு காலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்திய இடமாக இருந்தது. ஆனால் தற்போது வியாபாரம் முழுமையாக நின்று, சந்தை வளாகம் வெறிச்சோடி கிடக்கிறது. நேரில் பார்வையிட்டபோது, அப்பகுதியினர் பகிர்ந்த தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

அப்பகுதியினர் கூறுகையில், “பல ஆண்டுகளாக உழவர் சந்தையில் வியாபாரம் நடைபெறாததால், விவசாயிகளும் வியாபாரிகளும் வாரச்சந்தைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு மாறிவிட்டனர். சந்தைக்காக கட்டப்பட்ட கடைகளும் தற்போது பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கின்றன. மீண்டும் இங்கு வியாபாரம் தொடங்குவதற்கு விவசாயிகளிடமும் ஆர்வம் குறைந்துள்ளதாக” அவர்கள் தெரிவித்தனர்.

இந்த உழவர் சந்தையைச் சுற்றி புறநகர் மருத்துவமனை, பூங்கா, அங்கன்வாடி பள்ளி, முதியோர் இல்லம் போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. இவ்வளவு முக்கியமான இடங்களுக்கு நடுவில் இருந்தாலும், இரவு நேரங்களில் மது அருந்துவோர் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது, வளாகத்தை அசுத்தப்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மேலும், மின்வயர்கள், டியூப் லைட்கள், சுவிட்ச் போர்டுகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டுள்ளதோடு, போதிய தெருவிளக்குகளும், சிசிடிவி கண்காணிப்பும் இல்லாததால் இந்த இடம் பாதுகாப்பற்ற பகுதியாக மாறியுள்ளதாகவும் அச்சத்துடன் தெரிவித்தனர்.
போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், அவர்கள் சென்ற பிறகே இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போதிய தெருவிளக்குகள், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.





இந்த இடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உழவர் சந்தையை வாரச்சந்தையாக மாற்றினால் பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் என்றும், அல்லது வாகன நிறுத்துமிடமாக (பார்க்கிங்) மாற்றினாலும் இந்த இடம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எந்தத் திட்டமாக இருந்தாலும், தற்போது பயன்பாடின்றி கிடக்கும் இந்த வளாகத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
