“வி.எஸ். பாபு நலமுடன் உள்ளார்” – மருத்துவமனை நிர்வாகம்!

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஐ.சி.யூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த (இன்று – 11.09.2026 மதியம் 02.30 மணியளவில்) அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 09 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன், தகுந்த மருத்துவப் பராமரிப்பின் கீழ் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வி.எஸ்.பாபுவை, அமைச்சர் மரிய வில்சன் நேற்று (10.09.2026) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் மரிய வில்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வி.எஸ். பாபு நலமுடன் உள்ளார். முதலமைச்சர் விஜய் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link