திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க துரை வைகோ வலியுறுத்தல்

புதுக்கோட்டை: “புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும்” என்று திருச்சி எம்.பி. துரை வைகோ வலியுறுத்தினார்.

புதுக்கோட்டையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முதல்வர் விஜய் கொடுத்து வருகிறார். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, மக்கள் ஆதரவுடன் தவெக தலைமையிலான கூட்டணி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும். இந்தக் கூட்டணியில் தேர்தலின் கடைசி நேரத்தில் இடதுசாரிக் கட்சியினர் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மிசா அமலில் இருந்தபோது முதலில் கைது செய்யப்பட்டதும், கடைசியாக விடுதலை செய்யப்பட்டதும் வைகோதான். அப்போது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது நேரடி அரசியல் காரணத்துக்காக அல்ல.

முதல்வர் விஜய் உடல்மொழி குறித்துத் தனிப்பட்ட நபர் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், தன்னைப் பார்த்துதான் பேசியதாகச் சிலர் அனுதாபத்தைத் தேடுவது போன்று தெரிகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு மதிமுகதான் காரணம். இந்த விவகாரத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி கடந்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; தவெக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தினேன். இதுவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவும் ஆகும். புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இண்டியா கூட்டணி முடிவு செய்யும்” என்றார்.

Source link