இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி, 320 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால், பாகிஸ்தான் அணி இன்றனிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி டாப் ஆர்டர் பேட்டர்கள் அசான் அவைஸ் 59 (84), ஷான் மசூத் 95 (148), கேப்டன் பாபர் அசாம் 76 (103) ஆகியோர் அடுத்தடுத்து அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள்.
இருப்பினும், இந்த ரன்கள் போதுமானதாக இருக்கவில்லை. 320 ரன்களை திருப்பி அடித்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 318/8 என தடுமாறியது. இதனால், இங்கிலாந்து அணிக்கு கிட்டதட்ட 50 ரன்களுக்குள்தான் இலக்கு இருக்கும் என கணிக்கப்பட்டது.
அபார பேட்டிங்: இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர், 9ஆவது இடத்தில் ஆடிய ரசவுல்லா தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 63 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 81 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். மேலும், இவருடன், 10ஆவது இட பேட்டர் முகமது அப்பாஸ் 67 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 42 ரன்களை எடுத்தார். இப்படி, இந்த இரண்டு பேட்டரும் சேர்ந்து, 123 பந்துகளில் 121 ரன்களை சேர்த்து, பாகிஸ்தான் அணிக்கு வலு சேர்த்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 449/10 ரன்களை குவித்து, இங்கிலாந்து அணிக்கு 129 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தனர்.
வரலாற்று சாதனை: அறிமுக டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்தோர் பட்டியலில் ரசவுல்லா முதல் இடத்தில் இருக்கிறார். 2008ஆம் ஆண்டில், டிம் சௌதி, இங்கிலாந்துக்கு எதிராக, அறிமுக டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் 9 சிக்ஸர்களை அடித்திருந்த நிலையில், தற்போது ரசவுல்லாவும் 9 சிக்ஸர்களை அடித்து, முதல் இடதைத பகிர்ந்துள்ளார். 2021ஆம் ஆண்டில், வங்கதேசத்திற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிமுக வீரர் கைல் மேய்ர்ஸ் 7 சிக்ஸர்கள் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார்.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், பாகிஸ்தான் அணி, மொத்தம் 12 சிக்ஸர்களை அடித்துள்ளது. 2009ம் ஆண்டிற்கு பிறகு, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை அடித்துள்ளனர். 2009ஆம் ஆண்டில், இலங்கை அணிக்கு எதிராக, கராச்சியில் பாகிஸ்தான் அணி, ஒரு இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை அடித்திருந்தது.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் அதிகப்பட்ட இரண்டாவது பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் இதுதான். 2016ஆம் ஆண்டில், ஓவல் மைதானத்தில், 2ஆவது இன்னிங்ஸில் 542 ரன்களை அடித்திருந்தனர். தற்போது, 449 ரன்களை சேர்த்துள்ளார்கள்.
இங்கிலாந்தால் வெல்ல முடியுமா? பிட்ச், பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது. இதனால், இங்கிலாந்து அணி, 15 ஓவர்களிலேயே இந்த ரன்களை அடித்து வெற்றியைப் பெற அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை, மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியைப் பெற்றால், பாகிஸ்தான் அணியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
