எழுதியவர்: Shubhajit Roy
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பு, இந்த வார இறுதியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் களத்தில் நிகழ்ந்தது. உச்சிமாநாட்டின் முதல் நாள் முடிவில், சனிக்கிழமை மாலையில் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.
இவை தவிர மேலும் பல சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிரதமர், எத்தியோப்பியா, மலேசியா, அபுதாபி மற்றும் வியட்நாம் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஷி ஜின்பிங்குடனான இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய பிரதமருக்கும் சீன அதிபருக்கும் இடையிலான சந்திப்புகள் அரிதாகவே நடப்பவை. மேலும் அவை பல தசாப்த கால புவிசார் அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ பதற்றங்களை உள்ளடக்கியவை. ஏழு ஆண்டுகளில் ஷி ஜின்பிங்கின் முதல் இந்திய வருகையான இந்த முறையும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால், 2019 முதல் முறையாக அதிகரித்துள்ள வர்த்தக பற்றாக்குறை இதில் மாறுபட்ட ஒன்றாக இருக்கும். 2019 இல் சீனாவுக்கு சாதகமாக சுமார் 11 பில்லியன் டாலராக இருந்த இந்த பற்றாக்குறை, தற்போது 112 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மோடி-ஷி பேச்சுவார்த்தையின் ஒரு பெரும் பகுதி இதில் நிச்சயமாக கவனம் செலுத்தும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
சீன சந்தைகளில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் உட்பட இந்த தொடர்பான பிரச்சனைகளை ஒரு ‘வர்த்தக பொருளாதார உரையாடல்’ (strategic economic dialogue) அணுகும் என்று ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சனை குறித்து பெய்ஜிங்கில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையும் இவ்விரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி-புடின் இருதரப்பு சந்திப்பு
தங்கள் சந்திப்பில், மோடியும் புடினும் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகள் குறித்தும், 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கு குறித்தும் விவாதித்தனர். அன்று மாலை நடைபெற்ற பிரிக்ஸ் நிகழ்வில் புடின் இச்சந்திப்பு குறித்துப் பேசுகையில், ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கும், ஆர்க்டிக் போக்குவரத்து வழித்தடம் (Arctic Transport Corridor) போன்ற நம்பகமான விநியோகப் பாதைகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அவரது பேச்சு, குறிப்பாக ‘நம்பகமான விநியோகப் பாதைகள்’ என்ற வார்த்தை, பிரிக்ஸ் உறுப்பினரான ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தொடர்வதையும், அதனால் முக்கிய ஹோர்முஸ் ஜலசந்தி பகுதி பகுதியளவில் மூடப்பட்டு விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் நினைவூட்டுவதாக அமைந்தது. இது உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியதோடு வாழ்வாதாரச் செலவுச் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆழமாகும் பாதுகாப்பு உறவு
இந்தியாவும் ரஷ்யாவும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை மேம்படுத்துதல், எஞ்சிய S-400 ஏவுகணைகளை விநியோகித்தல் மற்றும் Su-57 போர் விமானங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்தன. இது டெல்லியின் முதன்மை பாதுகாப்புப் பங்காளியாக மாஸ்கோ தொடர்ந்து நீடிப்பதை சுட்டிக்காட்டுகிறது.
எரிசக்தி அடித்தளம்
இரு தரப்பும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, கூடுதல் அணு உலைகள் மற்றும் அணு எரிபொருள் சுழற்சி குறித்து விவாதித்தன. அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் தள்ளுபடி விலையிலான ரஷ்ய கச்சா எண்ணெய் வரத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டன.
வர்த்தக இலக்கு
தொழில்துறை ஒத்துழைப்பு, ரயில்வே, எஃகுத் துறை மற்றும் ரஷ்யாவில் இந்தியப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
போர்ச்சூழல்
மேற்கு ஆசியா மற்றும் கருங்கடல் பகுதிகளில் நிலவும் மோதல்கள் குறித்து மோடியும் புடினும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அதில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் வர்த்தகம் மீதான பாதிப்புகள் குறித்து இந்தியா கவலை எழுப்பியது.
பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம்
2026 ஆம் ஆண்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, பிரிக்ஸ் அமைப்பை மேலைநாடுகளுக்கு எதிரான அமைப்பாக மாற்றாமல் வர்த்தகம், நிதி, எரிசக்தி, முக்கிய தாதுக்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் நடைமுறை ஒத்துழைப்பை நோக்கி தள்ள முயல்கிறது. இதற்காக ரஷ்யாவின் ஆதரவையும் இந்தியா கோருகிறது.
ஷி ஜின்பிங்கின் வருகை
சனிக்கிழமை நடைபெறும் மோடி-ஷி இருதரப்பு சந்திப்பு, ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் முதல் சந்திப்பாகும். கசான் சந்திப்பிற்குப் பிறகு உருவான மெதுவான சுமுகமான உறவு, வெறும் எல்லைப் படைகள் விலக்கத்தைத் தாண்டி பரந்த அளவிலான ஸ்திரத்தன்மைக்கு நகருமா என்பதற்கான சோதனையாக இது அமையும்.
முதலில் எல்லைப் பிரச்சனை
பெய்ஜிங்கில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையே அண்மையில் நடைபெற்ற எல்லைப் பேச்சுவார்த்தைகளை இரு தரப்பும் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்லை மேலாண்மை மற்றும் எல்லை நிர்ணயத்தில் விரைவான முன்னேற்றத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு தலைவர்களும் ஒப்புதல் அளிப்பர்.
வர்த்தக சமனின்மை
நிகர்ற்ற இருதரப்பு வர்த்தகம் (FY 2024–25 இல் சுமார் $127.7 பில்லியன்) மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை (சுமார் $112 பில்லியன்) குறித்து இந்தியா வலியுறுத்தும். இந்திய மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு நியாயமான சந்தை வாய்ப்புகளை வழங்கி, வர்த்தகத்தைச் சமநிலைப்படுத்த முயலும்.
சுயாதீன உத்தி
24 மணி நேரத்திற்குள் நடக்கும் புட்டின்-ஷி சந்திப்புகள் இந்தியாவின் சுயாதீனமான அணுகுமுறையைக் காட்டுகின்றன. மாஸ்கோவுடனான உறவை ஆழப்படுத்துவது, பெய்ஜிங்குடனான பலவீனமான உறவைச் சீரமைக்க முயல்வது, மற்றும் மேலைநாடுகள் அல்லது சீனா-ரஷ்யா ஆகிய எந்தவொரு கூட்டமைப்பிற்குள்ளும் சிக்காமல் சுதந்திரமாகச் செயல்படுவது ஆகியவற்றை இது வெளிப்படுத்துகிறது.
இதன் முக்கியத்துவம்
இந்தச் சந்திப்புகள் அனைத்தும் இந்தியா பிரிக்ஸ் அமைப்பை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை வரையறுக்கின்றன. ரஷ்யாவுடன் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல், சீனாவை எல்லை ஸ்திரத்தன்மை மற்றும் நியாயமான வர்த்தகத்தை நோக்கி நகர்த்துதல், மற்றும் பிளவுபட்டு வரும் உலக அமைப்பில் இந்தியாவை ஒரு தவிர்க்க முடியாத, சுதந்திரமான சக்தியாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
