நெஞ்சை பிழியும் துயரம்; நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 78 பேர்; உறவினர்கள் டிஎன்ஏ மாதிரி அனுப்பிவைப்பு

காத்மாண்டு: நேபாளத்திற்கு 78 தமிழர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது.

நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியின் இமய மலை தொடரில் உள்ள பனிப்பாறைகடந்த மாதம் 26ம் தேதி திடீரென உடைந்து சரிந்து அருகில் இருந்த நதியில் விழுந்தது. இதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 1,500 பேர் பலியாகினர்; 5,600க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

திடீர் வெள்ளம் ஏற்பட்டு 17 நாட்கள் கடந்துவிட்டன. சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் கடந்த மாதம் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 49 பேரின் குடும்பத்தினர், காணாமல் போனவர்கள் குறித்த எந்தத் தகவலும் தமிழக அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில், நேபாளத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் முயற்சியாக, காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ பரிசோதனைக்காக சென்னை, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் உள்ள மூன்று ஆய்வகங்கள் மூலம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போன மொத்தம் 85 தமிழர்களில் 78 பேரின் உறவினர்களின் டிஎன்ஏ விவரங்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் காணாமல் போனவர்களில் நான்கு பேரின் நெருங்கிய உறவினர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதன் பிறகு டிஎன்ஏ பரிசோதனைக்காக அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குரோம்பேட்டையில் உள்ள வெளிநாட்டு பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர் மாரவேலின் 28 வயது மகன் சத்ய நாராயணனும் அந்த 48 பேருடன் அப்பயணத்தில் சென்றிருந்தார்.

இது குறித்து மாரவேல் கூறியதாவது: ”ரத்த மாதிரிகள் வழங்கப்பட்டுவிட்டன; பெரும்பாலான டிஎன்ஏ விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது. என் குடும்பத்தினர் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம்.

நாங்கள் ஒரு ஜோதிடரை அணுகினோம்; என் மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவான் என்றும் அவர் கூறினார். மீட்புப் பணிகளுக்கு உதவ தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் காத்மாண்டுவிற்குச் சென்றுள்ளனர்” என்றார்.

பேரிடர் ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் மக்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக வந்த செய்திகள் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளதாக மாயமானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Source link