அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்; பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தல்

புதுடில்லி: அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று டில்லியில் துவங்கிய பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று துவங்கியது. பிரதமர் மோடி தலைமையில் பாரத் மண்டபத்தில் நடந்து வரும் இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட தென்னாப்ரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வரவேற்று உரை பிரதமர் மோடி நிகழ்த்தினார். அவர் பேசியதாவது; பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. நிலையான வளர்ச்சியே இந்தியாவின் தாரக மந்திரம். மக்களும், மனிதாபிமானமும் நமது முதன்மை நோக்கமாகும்.

பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் பிரிக்ஸ் செயல்படுகிறது. அனைவரும் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஐநா பொதுச்சபையில் தாமதிக்காமல் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். கடல்வழி வர்த்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை எவ்வளவு விலை கொடுத்தாவது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

4 மணிக்கு பிரகடனம்

எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், பல்வேறு நாடுகளிடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, ‘பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி’ என்பதை மையமாக வைத்து, இன்று மாலை 4 மணிக்கு பிரிக்ஸ் டில்லி பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அனைத்து நாட்டு அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

Source link