சென்னை: தமிழ் சினிமாவில் அரசியல் கதைகள் புதுசு கிடையாது ஆனால் நடப்பு அரசியலை அப்படியே உரசி பார்க்கிற மாதிரி ஒரு வசனம் வந்து விட்டாலே போதும் அதுதான் அடுத்த வைரல் கண்டண்ட். அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருவது கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர் தான்.
அதில் “எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகிறது அந்த காலம்.. எல்லோருக்கும் தெரிந்தவன் தலைவர் ஆகிறது தான் இந்த காலம்” என்ற வசனத்துடன் டீசர் ஆரம்பிப்பது யாரை சொல்றாங்க என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி விட்டது. குறிப்பாக இப்போது தமிழக அரசியலில் நடிகர் விஜய் முதல்வராக இருப்பதால் அந்த வசனம் அவரை மனதில் வைத்து தான் எழுதப்பட்டதா? என்ற விவாதமும் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கௌதம் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்று அடையாளத்துடன் மணிரத்தினத்தின் கடல் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், இவன் தந்திரன், பத்து தல என பல வித்தியாசமான படங்களில் முயற்சி செய்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஒரு பெரிய கமர்சியல் வெற்றி தொடர்ந்து அமையவில்லை. அதனால் இந்த படம் அவருக்கு இன்னொரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கவுதம் கார்த்திக் இப்போது கெளதம் ராம் கார்த்திக் என்ற பெயரில் தான் நடித்து வருகிறார். இந்த பெயரை அவர் 2025-ல் பயன்படுத்த தொடங்கினார். அவரின் தாத்தா நடிகர் முத்துராமனின் பெயரான ராம் பெயரை சேர்த்துக் கொண்டதாக அவரே விளக்கம் கொடுத்திருந்தார். அதனால் பெயர் மாறியது, படங்கள் மாறியது, இப்போது கதையும் கொஞ்சம் வேற லெவலுக்கு போயிருக்கிறது.
பிளடி பாலிடிக்ஸ் டீசரை பார்க்கும்போது சாதாரண அரசியல் தொண்டனாக இருக்கும் கௌதம் கார்த்திக் எப்படி அரசியலுக்குள் நுழைந்து அதிகாரத்தை நோக்கி நகர்கிறார் என்பதுதான் கதையின் மையமாக இருக்கும் போல தெரிகிறது. அரசியல், அதிகாரம், துரோகம், தலைமை போட்டி என எல்லாமே கலந்த ஒரு அரசியல் ஆக்சன் கதையாக டீசர் ஒரு ஐடியாவை கொடுத்து இருக்கிறது.
கார்த்தியின் சர்தார் 2 vs சூரியின் மண்டாடி 2வது நாளில் யார் மாஸ்? வசூலில் எதிர்பாராத மாற்றம்!
அதுவும் எல்லோருக்கும் தெரிந்தவன் தலைவர் ஆகிறான் என்ற வசனம் மட்டும் இல்லாமல் அரசியல் தலைமை எப்படி மாறிவிட்டது என்பதையும் மக்களாக பேசும் வசனங்கள் இருப்பதாக தெரிகிறது. படத்தின் வசனங்களை இயக்குனர் ராஜமுருகன் எழுதியிருக்கிறார். அதுபோல இந்த படத்தின் டீசரில் இன்னொரு பெரிய சர்ப்ரைஸ் செல்வராகவன்.
புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியவர் இப்போது அரசியல் தலைவராக திரையில் வில்லத்தனம் காட்டி இருக்கிறார். அதைவிட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் பி. வாசு. சந்திரமுகி போன்ற படங்களை இயக்கிய பி வாசு இங்கே செக்யூரிட்டி மாதிரியான கேரக்டரில் வருவது டீசரிலேயே அட இவரா என்று பார்க்க வைக்கிறது. ஆனால் அரசியல் படத்துக்கு வசனம் மட்டும் போதாது. கதை தான் கடைசியில் ஓட்டு போடணும். பிளடி பாலிடிக்ஸ் அந்த ஓட்டை வாங்குமா? அல்லது வசனம் நல்லாதான் இருந்துச்சு என்று சொல்லிவிட்டு ரசிகர்கள் அடுத்த படத்துக்கு போய் விடுவார்களா? என்பது தான் பார்க்க வேண்டியது.
