வார்த்தைகளை அளந்து பேசட்டும்.. இல்லையென்றால்.. சேகர் பாபுவுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ரமேஷ்

சென்னை: அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது.எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், “ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை.

குறிப்பாக, இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது.

அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது.எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது.

எனவே, வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் ஆனால் அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும்” இவ்வாறு கூறியுளளார்.

தமிழகத்தில் தொடர்ந்து திமுக எதிர்க்கட்சியாக செயல்படவேண்டும் என்பதற்காகவே தான் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஈரோட்டில் கைத்தறி துறை அமைச்சர் விஜய்பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியானது நடைபெற்று வருகிறது. இதனை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி பேசுகையில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் விளையாட்டிலும் கொடுக்க வேண்டும் அரசின் நோக்கம்.அதற்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்து பரிசு பெறுவார்கள். மதச்சார்பற்ற கூட்டணி என பெயர் வைத்து ஐயூஎம்எல் கட்சியை இணைந்திருப்பது குறித்த கேள்விக்கு தலைவர்கள் விளக்கம் சொல்வார்கள். தமிழக முதல்வர் விஜய் அவர்களை கண்டித்து இன்றைக்கு திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் தொடர்ந்து எதிர்கட்சியாக செயல்படவேண்டும் என்பதற்காகவே தான் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறினார்.