TN By Polls: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் எத்தனை வாக்குகளை பெற்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தவெக பெரும்பான்மை இல்லாமல் 108 இடங்களில் மட்டும் வென்றது. இதையடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான போது அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியை நடத்தலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக இது போன்ற பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் தவெக கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தன.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக கட்சியில் இருந்து போனவர்கள், நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு மூத்த நிர்வாகிகள் கூறியும் எடப்பாடி பழனிசாமி அவரது பதவியை காத்துக் கொள்ள முயற்சிக்கிறாரே தவிர, அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதற்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்)ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதில் திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா, அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் கே.பானுமதி ஆகியோர் வேட்பாளர்கள் ஆவர்.

தவெகவை பொருத்தமட்டில் அதிமுகவில் இருந்து இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும் சத்தியபாமா தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்பார்கள். ஆனால் தவெகவின் செயல்பாடுகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதால் இந்த முறை தவெகவுக்கு பாடம் கற்பிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்கிறார்கள். மேலும் இரு தொகுதிகளுமே அதிமுகவின் கோட்டை என்பதால் எப்படியும் ஜெயித்து விடுவோம் என்று அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அது போல் தமிழக சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலினை விஜய் அவமதிக்கும் போக்கையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சினைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி திமுக வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளதால் எப்படியும் நாம்தான் ஜெயித்து விடுவோம் என அக்கட்சி வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகளை பெற்றன என்பதை பார்க்கலாம்.

மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளையும் தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் 62,090 வாக்குகளையும் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளையும் பெற்றனர்.

நாதக சார்பில் போட்டியிட்ட ஜானகி ராமனுக்கு 4,950 வாக்குகளும் நோட்டாவுக்கு 797 வாக்குகளும் கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளருக்கும் இரண்டாம் இடத்தில் இருந்த தவெக வேட்பாளருக்கு 7,194 வாக்குகளே வித்தியாசம்.

அது போல் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற சத்தியபாமா 81,10 வாக்குகளையும் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64,373 வாக்குகளையும் தவெக சார்பில் போட்டியிட்ட கவுரி சித்ரா 46,438 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சியின் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மதுராந்கத்தில் இரண்டாம் இடத்தில் வந்த தவெக, தாராபுரத்தில் 3 ஆவது இடத்திற்கு சென்றது. வரும் இடைத்தேர்தலில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.