“தவெகவை தயங்காமல் எதிர்ப்போம்.. பட்டினப்பாக்கம் தலைமை செயலகம் தேவையில்லை!” வீரபாண்டியன் ஆவேசம்

சென்னை: நமது ஒன்இந்தியா தளத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த சிறப்பு பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார். தவெக அரசன் திட்டம், திருமாவளவனின் பேச்சு, மிசா ஸ்டாலின் கைது என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சாடியுள்ளார்.

இது குறித்து சிபிஐ வீரபாண்டியன் கூறுகையில், “பரந்தூர் விமான நிலையம் தேவையற்றது.. அதை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ஆனால், அந்த நிலங்களை அவர்களுக்கே திரும்ப தர வேண்டும். காற்று, நீர், நிலம் என மூன்றுமே அடுத்தடுத்த தலைமுறைக்கானது. ஆனால், இது நாடு முழுக்க சூறையாடப்படுகிறது. இயற்கையை சிதைக்கும் திட்டம் எதற்கும் நாம் அனுமதிக்க கூடாது.

பட்டினப்பாக்கத்தை எடுத்து கொண்டால்.. அங்கு இருப்பவர்கள் மீனவர்கள் தான். நாகரீகத்திற்கு அவர்கள் மிக பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். பல தலைமுறைகளாக மீனவர்கள் அங்கு தான் வாழ்ந்து வருகிறார்கள். அந்த சூழலில் இருந்து அவர்களை பிரித்துவிட்டால் அவர்களுக்கு வேறு எதுவும் இல்லாமல் போய்விடும். எனவே, அரசு அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். கடற்கரை என்பது இயற்கை மனிதர்களுக்கு கொடுத்த நன்கொடை. இதன் காரணமாகவே கடற்கரையில் கட்டிடம் கட்ட உலக நாடுகள் தடை செய்கிறது.

புதிய மாற்றத்தை கொடுப்பேன் என சொல்லும் முதல்வர், பல்வேறு மாவட்டங்களிலும் முதன்மையாக இருக்கும் மருத்துவமனை கோரிக்கைக்கு முன்னுரிமை தர வேண்டும். எங்களை பொறுத்தவரை மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்க மாட்டோம். இருக்கும் சட்டமன்றமே போதுமானது. எதற்காக புதிய இடம்.. பாதுகாப்பு குறைபாடா என்ன என்பது குறித்து விளக்கம் தர வேண்டும்” என்றார்.

திருமாவளவன் சமீபத்தில் திமுகவை விமர்சித்து பேசியது குறித்து, “கடந்த 10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்தோம். கொள்கை கூட்டணியாக இருந்து மத்திய அரசையும். ஆளுநரின் இரட்டை ஆட்சி முறையையும் எதிர்த்தோம். 10 ஆண்டுகளாக நாம் கூட்டணியில் இருந்தோம். தவறுகள் இருந்தால் அப்போது சுட்டிக்காட்டி இருக்கலாம். இப்போது நாம் வெளியே இருக்கிறோம். இப்போது சொல்வது சரியானதாக இருக்காது. இதை அவர் தவிர்த்திருக்கலாம். தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளக்கூடியவர்.

நாங்கள் திமுகவில் இருந்து வெற்றி பெற்றோம். பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது.. ஆளுநர் ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இப்போது நாங்கள் ஆதரவு தருகிறோம். எங்கள் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படலாம். தேவைப்படாமல் போகலாம். ஆனால், நாங்கள் உழைக்கும் எளிய மக்கள் பக்கமே நிற்போம். அதில் எந்தவொரு சமரமும் இல்லை. இன்றைய காலத்தில் கூட்டணிக்கு தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஓரிரு இடங்களை மட்டும் வைத்து கொண்டு கொள்கை அளவில் முடிவுகளை எடுக்க முடியாது என்பதற்காகவே நாங்கள் அமைச்சரவையில் பங்கெடுக்கவில்லை. அந்த நம்பரை எட்டும் போது நாங்களும் அமைச்சரவையில் பங்கேற்போம்” என்றார்.

தவெகவின் மவுனம் குறித்து பேசிய வீரபாண்டியன், “தமிழக நலன் என வரும்போது, தேசிய நலன் என வரும்போது மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டி வரும். மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்கும்போது மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அதை தான் தமிழகமே எதிர்பார்க்கிறது. நாட்டின் இறையாண்மைக்குப் பிரச்சினை வரும்போது தவெக நிச்சயம் குரல் எழுப்ப வேண்டும். அப்போதும் தவெக அமைதியாக இருந்தால் நிச்சயம் தவெகவையும் எதிர்ப்போம்” என்றார்.

மிசா ஸ்டாலின் கைது குறித்து வீரபாண்டியன், “பேசிய மிசா ஒரு ஜனநாயக விரோத செயல். அதில் ஸ்டாலின் பாதிக்கப்பட்டார் என்பது உண்மை. திமுக எமர்ஜென்சிக்கு எதிராக போராடியது உண்மை. அதுதான் உண்மை” என்றார்.