வேலூர்: “நாங்கள் அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள். பல வழக்குகளை பார்த்தவர்கள். விஜய்க்கு எதையும் படிக்க நேரம் கிடையாது” என திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேசியுள்ளார்.
மேலும், “முதலமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், அவர் புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார் துரைமுருகன்.
காட்பாடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “சட்டப்பேரவையில் போலீஸ் மானிய கோரிக்கையின்போது மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசாமல் எப்போதோ நடந்த சர்க்காரியா கமிஷன், மிசா குறித்து முதல்வர் பேசுகிறார்.
அவர் குறிப்பிட்ட வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் இவ்வளவு நாள் நாங்கள் அரசியல் செய்கிறோம். அதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் கிடையாது. யாரோ 2 பேர் பேசுவதை வைத்துப் பேசுகிறார்.
முதல்வர் விஜய் காவல் நிலையத்துக்கு போகும் பழக்கம் இல்லை. ஒரு எஃப்.ஐ.ஆர் கூட அவர் மீது கிடையாது. ஒரு 15 நாள் கூட அவர் சிறை சென்றது கிடையாது. தியாகத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும். ஏதோ அடித்த காற்றில் கோபுரத்தில் ஒட்ட வைத்தது போல ஒட்டியதால் இப்படி பேசி வருகிறார். தியாகம் புரிந்தவர்களுக்கு தான் தியாகம் தெரியும்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபப்பட காரணம் அவர்கள் தியாகம் புரிந்தவர்கள். இன்றைக்கும் தியாகம் புரிந்து கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள். எங்கள் தலைவர் குறித்த பேச்சுக்கு, அனைத்து கட் சிகளும் கண்டனம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை.
சட்டசபையில் மரபையும் விதியையும் மீறி நடந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர். சட்டப்பேரவையில் இல்லாதவர்களைப் பற்றி பேசக்கூடாது. அதை சபாநாயகரும் தடுக்கத் தவறி விட்டார். இதை காரணம் காட்டி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம்.
சட்டசபையில் நடந்ததையும், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததையும் திசை திருப்பவே கே.என்.நேரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எங்களின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறதாம். நாங்கள் அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள். எத்தனையோ வழக்கை சந்தித்தவர்கள்.
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் சட்டப்பேரவை கட்டுவதற்கு பதிலாக 3 சிலிண்டருக்கு பதிலாக 4 சிலிண்டர்கள் கொடுக்க வேண்டியது தானே. தமிழகத்தில் நடைபெறும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக வெல்லும்.
இந்த ஆட்சி ஜோதிடர் சொல்வதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
